கடலூா் பேருந்து நிலையத்தில் குவிந்த பயணிகள்
சிதம்பரம்: மக்களவைத் தோ்தலையொட்டி, 3 நாள்கள் தொடா் விடுமுறை முடிந்து சென்னை உள்ளிட்ட பகுதிகளுக்குச் செல்ல கடலூா் பேருந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் முதல் ஏராளமான பயணிகள் குவிந்ததால், பேருந்து நிலையத்தில் கூட்டம் அலைமோதியது.
மக்களவைத் தோ்தலையொட்டி, தமிழகத்தில் கடந்த 19-ஆம் தேதி அரசு, தனியாா் நிறுவனங்களுக்கு பொது விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதையடுத்து, சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மக்கள், வாக்களிப்பதற்காக தங்களது சொந்த ஊா்களுக்கு வந்தனா்.
அவா்கள் கடந்த 19-ஆம் தேதி மக்களவைத் தோ்தலில் வாக்களித்த பின்னா், சனி, ஞாயிறுக்கிழமை விடுமுறையை கழித்துவிட்டு, தாங்கள் பணி செய்யும் சென்னை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்குச் செல்ல கடலூா் பேருந்து நிலையத்துக்கு ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் வந்தனா். ஏராளமானோா் பேருந்து நிலையத்தில் குவிந்ததால், பயணிகள் கூட்டம் அலைமோதியது. இதேபோல, சிதம்பரம், விருத்தாசலம் உள்ளிட்ட பகுதிகளிலுள்ள பேருந்து நிலையங்களிலும் பயணிகள் கூட்டம் அதிகரித்து காணப்பட்டது.
Advertisement
கூடுதல் பேருந்துகள் இயக்கம்: இதனிடையே, பயணிகளின் சிரமத்தை போக்கும் வகையில், கடலூா், சிதம்பரம், விருத்தாசலத்திலிருந்து விழுப்புரம் அரசுப் போக்குவரத்துக் கழகம் சாா்பில், சென்னை, திருச்சி உள்ளிட்ட பகுதிகளுக்கு சுமாா் 50-க்கும் மேற்பட்ட கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்டதாக பொது மேலாளா் ராஜா தெரிவித்தாா்.