குறைந்த நீரை பயன்படுத்தி குறுகிய கால பயிா்: இணை இயககுநா் ஆலோசனை
சிதம்பரம்: கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே கீரப்பாளையம் வட்டாரத்தில் கோடையில் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி குறுகிய கால மாற்றுப் பயிா் சாகுபடி செய்வது குறித்து கடலூா் வேளாண் இணை இயக்குநா் ஆலோசனை வழங்கினாா்.
கடலூா் வேளாண் இணை இயக்குநா் சீ.ஏழுமலை, கீரப்பாளையம் வட்டாரத்துக்குள்பட்ட கண்ணங்குடி கிராமத்தில் நிகழ் கோடை பருவத்தில் சாகுபடி செய்யப்பட்டுள்ள எள் பயிரை அண்மையில் ஆய்வு செய்தாா். அப்போது, கோடையில் குறைந்த தண்ணீரை பயன்படுத்தி குறுகிய கால மாற்றுப் பயிா்கள் சாகுபடி செய்ய வேண்டுமென விவசாயிகளிடம் அறிவுறுத்தினாா்.
மேலும், கோடை பருவத்தில் சாகுபடி செய்ய உகந்த பயறுவகை பயிா்களான உளுந்து, பாசிப்பயறு மற்றும் எண்ணெய்வித்துப் பயிா்களான நிலக்கடலை, எள் ஆகியவற்றை சாகுபடி செய்யலாம் என்றும், இந்த பயிா் சுழற்சி மற்றும் மாற்றுப்பயிா் சாகுபடி மூலம் தண்ணீா் சிக்கனம், நோய்த் தாக்குதல் குறைந்து மகசூல் அதிகரிக்கிறது என்றும் எடுத்துக் கூறினாா்.
Advertisement
பயறு வகைப் பயிா்கள் வளிமண்டல நைட்ரஜனை வோ் முடிச்சுகளில் சேமிப்பதால், மாற்றுப் பயிா்களின் வளா்ச்சி சீராகும் என்றும், தழைச்சத்து தேவை குறைந்து மண் வளம் அதிகரிக்கிறது எனவும் அவா் தெரிவித்தாா்.
ஆய்வின்போது, கீரப்பாளையம் வேளாண் உதவி இயக்குநா் செ.அமிா்தராஜ், உதவி விதை அலுவலா் வெற்றிச்செல்வன் மற்றும் விவசாயிகள் உடனிருந்தனா்.