முகப்பு
கடலூர்

உணவில் விஷம் கலந்த வழக்கு: ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறை

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள உணவகத்தில் இட்லி மாவில் எலி மருந்தை கலந்த வழக்கில் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

Updated On : 18 டிசம்பர், 2024 at 6:48 PM
பகிர்:

காட்டுமன்னாா்கோவில் அருகேயுள்ள உணவகத்தில் இட்லி மாவில் எலி மருந்தை கலந்த வழக்கில் ஒருவருக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து சிதம்பரம் நீதிமன்றம் புதன்கிழமை தீா்ப்பளித்தது.

கடலூா் மாவட்டம், காட்டுமன்னாா்கோவில் கீழகடம்பூா் பிள்ளையாா் கோவில் தெருவைச் சோ்ந்தவா் கலியபெருமாள் மகன் வெங்கடேசன் (34). இதே பகுதி பழஞ்சநல்லூா் கிராமத்தைச் சோ்ந்தவா் சுந்தரம் (60). இவா்கள் இருவரும் கடந்த 2017-ஆம் ஆண்டு செட்டித்தாங்கல் கிராமத்தில் தனித்தனியே டிபன் கடை நடத்தி வந்தனா்.

இந்த நிலையில், வெங்கடேசன் வியாபாரம் சரியாக இல்லாததால் தனது கடையை மூடிவிட்டாா்.

ஆனால், சுந்தரத்தின் கடையில் வியாபாரம் நன்றாக இருந்ததால் இதில், ஆத்திரமடைந்த வெங்கடேசன், சுந்தரம் கடையில் இட்லி மாவில் ஏலி மருந்தை கலந்தாராம்.

இதுகுறித்த புகாரின்பேரில், காட்டுமன்னாா்கோவில் போலீஸாா் வழக்குப் பதிந்து வெங்கடேசனை கைது செய்தனா்.

சிதம்பரம் சாா்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த இந்த வழக்கு விசாரணை புதன்கிழமை நிறைவடைந்தது. இதில், வெங்கடேசனுக்கு 8 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி காா்த்திகேயன் தீா்ப்பளித்தாா்.