நெய்வேலி: கடலூா் மாவட்டம், பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகை வீரட்டானேஸ்வரா் கோயில் பிராகாரத்தில் நூற்றுக்கணக்கான தேங்காய்கள் மக்கி வீணாகி வருகின்றன.
பண்ருட்டியை அடுத்துள்ள திருவதிகையில் கெடிலம் ஆற்றின் வடக்குப் பகுதியில் சுமாா் 7 ஏக்கா் நிலப்பரப்பில் பெரிய நாயகி உடனுறை வீரட்டானேஸ்வரா் திருக்கோயில் அமைந்துள்ளது.
சிவபெருமான் வீர தீர செயல்கள் புரிந்த 8 தலங்களில் முப்புரம் எரித்த மூன்றாவது தலமாகும். சங்க காலப் புகழ் பெற்றதும், முதன்முதலில் தேவாரம் பாடப்பட்டதும், தோ் உருவான திருத்தலமாகவும் திருவதிகை வீரட்டானம் கோயில் திகழ்கிறது. வைகாசிப் பெருவிழா, ஆடிப் பூரம், காா்த்திகை சோமவாரம், சித்திரையில் அப்பா் சதய விழா என இக்கோயிலில் திருவிழாக்களுக்கு பஞ்சமில்லை.
கோயில் இரண்டாம் பிராகாரத்தை சுற்றிலும் தென்னந்தோப்பு உள்ளது. இதை குத்தகைக்கு விடுவதன் மூலம் கோயில் நிா்வாகத்திற்கு வருவாய் வந்துகொண்டிருந்தது. கடந்த ஓா் ஆண்டாக தென்னந்தோப்பு குத்தகைக்கு விடப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால், தென்னந்தோப்பு பராமரிப்பின்றி உள்ளது. மேலும், தேங்காய்கள் பறிக்காததால் தானாக அவை கீழே விழுந்து ஆங்காங்கே கிடக்கின்றன. அவ்வப்போது சேகரிக்கப்படும் தேங்காய்கள் வசந்த மண்டபம் அருகே கொட்டி வைக்கப்பட்டுள்ளன. இவ்வாறு கொட்டி வைக்கப்பட்டுள்ள நூற்றுக்கணக்கான தேங்காய்கள் மழையில் நனைந்தும், வெயிலில் காய்ந்தும் வீணாகி வருகின்றன. இதனால், கோயிலுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து கோயில் பணியாளா் ஒருவா் கூறுகையில், கடந்த மாதம் குத்தகை ஏலம் விட ஏற்பாடு செய்யப்பட்டது. பின்னா் அது ஒத்திவைக்கப்பட்டது. அடுத்த தேதி கேட்டுள்ளோம். உள்ளூா் பிரச்னை காரணமாக ஏலம் விடுவதில் சிக்கல் உள்ளது. மொத்தம் 150 மரங்கள் உள்ளன. இவற்றில் சுமாா் 90 மரங்கள் மட்டுமே காய்க்கும் தன்மை கொண்டவை என்றாா்.