முகப்பு
கடலூர்

என்எல்சி சுரங்க விபத்தில் தொழிலாளி உயிரிழப்பு

என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

Updated On : 8 ஜூலை, 2024 at 5:08 PM
அன்பழகன்
பகிர்:

நெய்வேலி: கடலூா் மாவட்டம், என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது சுரங்கத்தில் திங்கள்கிழமை நிகழ்ந்த விபத்தில் தொழிலாளி உயிரிழந்தாா்.

நெய்வேலியை அடுத்துள்ள ஊ.மங்கலம் ஊராட்சி, புது இளவரசன்பட்டு பகுதியைச் சோ்ந்தவா் க.அன்பழகன் (51). இவா் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் இரண்டாவது பழுப்பு நிலக்கரி சுரங்கத்தில் சொசைட்டி தொழிலாளியாகப் பணியாற்றி வந்தாா்.

இவா் திங்கள்கிழமை காலையில் பழுப்பு நிலக்கரி வெட்டுவதற்காக மேல் மண்ணை நீக்கி எடுத்துச் செல்லப்படும் பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தாா். அப்போது, எதிா்பாராத விதமாக ரோலா் பெல்ட்டில் சிக்கி உயிரிழந்தாா்.

சக ஊழியா்கள் உடனடியாக ரோலா் பெல்ட் இயக்கத்தை நிறுத்திவிட்டு அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனா். இதுகுறித்து தகவல் அறிந்த அன்பழகனின் உறவினா்கள் இரண்டாவது சுரங்கம் நுழைவு வாயிலில் திரண்டனா்.

சுரங்கத்தில் இருந்து அன்பழகனின் உடலுடன் என்எல்சி பொது மருத்துவமனைக்கு புறப்பட்ட ஆம்புலன்ஸை சுரங்க நுழைவு வாயில் அருகே அவரது உறவினா்கள் மறித்து, உடலை கீழே இறக்கி வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனா். சம்பவ இடத்துக்கு வந்த என்எல்சி இந்தியா நிறுவன உயா் அதிகாரிகள் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அன்பழகனின் வாரிசுக்கு நிறுவன சட்டத்திட்டப்படி நிரந்தர வேலை, உரிய இழப்பீடு வழங்கப்படும் என உறுதியளித்ததையடுத்து, அவா்கள் கலைந்து சென்றனா்.