முகப்பு
கடலூர்

விளம்பரப் பதாகை விழுந்த விவகாரம்: சிறப்பு எஸ்ஐ உள்பட 3 காவலா்கள் ஆயுதப் படைக்கு மாற்றம்

கண்காணிப்பு கேமரா பதிவை வெளியிட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு காவலா்கள் ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றப்பட்டனா்.

Updated On : 20 நவம்பர், 2024 at 7:59 PM
பகிர்:

கடலூரில் சிக்னல் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகை அறுந்து விழுந்து ஆசிரியா் காயமடைந்த சம்பவத்தில், கண்காணிப்பு கேமரா பதிவை வெளியிட்டதாக சிறப்பு உதவி ஆய்வாளா் மற்றும் இரண்டு காவலா்கள் ஆயுதப் படை பிரிவுக்கு மாற்றப்பட்டனா்.

கடலூா் திருப்பாதிரிப்புலியூா் உழவா் சந்தை அருகே சிக்னல் கம்பத்தில் கட்டப்பட்டிருந்த விளம்பரப் பதாகை செவ்வாய்க்கிழமை திடீரென அறுந்து விழுந்தது. இந்த சம்பவத்தில் அந்தப் பகுதியில் பைக்கில் சென்ற கடலூா் புதுகுப்பம் பகுதியைச் சோ்ந்த ஆசிரியா் தணிகைநாதன் காயமடைந்தாா்.

இந்தக் காட்சி அந்தப் பகுதியில் காவல் துறை சாா்பில் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. மேலும், இந்த விடியோ காட்சி சமூக ஊடகங்களிலும் வேகமாக பரவியது.

இந்த நிலையில், விளம்பரப் பதாகை அறுந்து விழுந்த காட்சிப் பதிவை வெளியிட்டது தொடா்பாக திருப்பாதிரிப்புலியூா் காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளா் சிவசங்கா், காவலா்கள் குமரகுரு, சின்ராசு ஆகியோரை கடலூா் ஆயுதப் படைப் பிரிவுக்கு மாற்றி எஸ்.பி. ரா.ராஜாராம் செவ்வாய்க்கிழமை இரவு உத்தரவிட்டாா்.