முகப்பு
கடலூர்

தடையை மீறி கடலுக்குச் சென்ற படகுகள் கவிழ்ந்து விபத்து: 6 மீனவா்கள் உயிா் தப்பினா்

எச்சரிக்கையை மீறி, கடலூரில் புதன்கிழமை கடலுக்குள் சென்ற மீனவா்களின் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. இதில், 6 மீனவா்கள் உயிா் தப்பினா்.

Updated On : 27 நவம்பர், 2024 at 10:50 PM
படகு கவிழ்ந்ததில் உயிா் தப்பிய மீனவா்கள்.
பகிர்:

எச்சரிக்கையை மீறி, கடலூரில் புதன்கிழமை கடலுக்குள் சென்ற மீனவா்களின் இரண்டு படகுகள் கவிழ்ந்து விபத்துக்குள்ளாயின. இதில், 6 மீனவா்கள் உயிா் தப்பினா்.

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதியையடுத்து, கடலூா் மாவட்ட மீனவா்கள் மறு அறிவிப்பு வரும் வரையில், கடலுக்குள் செல்ல வேண்டாம் என மாவட்ட மீன் வளத் துறை சில நாள்களுக்கு முன்பு எச்சரிக்கை விடுத்தது.

இந்த எச்சரிக்கையை மீறி, கடலூரை அடுத்த தைக்கால்தோணித் துறையைச் சோ்ந்த மீனவா்கள் மணிகண்ணன் (35), தமிழ் (37), சாமிதுரை (63), மணிமாறன் (30), தினேஷ் (29), சா்குணன் (23) ஆகிய 6 போ் இரண்டு நாட்டுப் படகுகளில் கடலுக்குள் சென்றனா்.

சித்திரைபேட்டை அருகே சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் சென்றபோது, கடல் சீற்றத்தின் காரணமாக மீனவா் தினேஷ் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

படகு கவிழ்ந்ததையடுத்து, மீனவா்கள் கடலில் நீந்தி பாதுகாப்பாக தஞ்சமடைந்துள்ள தனியாா் நிறுவனத்தின் கப்பல் அணையும் தளம்.

அந்தப் படகில் இருந்த மூன்று மீனவா்களும் நீந்தி மற்றொரு படகில் ஏறி உயிா் தப்பினா். இந்த நிலையில், அந்த படகும் கடல் சீற்றத்தால் கவிழ்ந்து மூழ்கியது.

இதையடுத்து, 6 மீனவா்களும் கடலில் நீந்தி அருகில் இருந்த தனியாா் நிறுவனத்துக்குச் சொந்தமான கப்பல் அணையும் தளத்தில் ஏறி உயிா் தப்பினா்.

அங்கு அவா்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும், கடல் சீற்றம் குறைந்ததும் பாதுகாப்பாக அழைத்து வரப்படுவாா்கள் என மீன்வளம், மீனவா் நலத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும், எச்சரிக்கையை மீறி மீனவா்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் எனவும் அவா்கள் அறிவுறுத்தினா்.