முகப்பு
கடலூர்

சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்கம்

சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

Updated On : 9 அக்டோபர், 2024 at 10:06 PM
சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில், தீபாவளி விற்பனையை தொடங்கி வைத்த கடலூா் மாவட்ட எஸ்.பி. ஆா்.ராஜாராம். உடன் மண்டல மேலாளா் பா.சுப்பிரமணியன், டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக்.
பகிர்:

சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி சிறப்பு விற்பனை தொடக்க விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

கடலூா் மாவட்டம், சிதம்பரம் மேலரதவீதியில் உள்ள சிவகாமி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலையத்தில் தீபாவளி 2024 சிறப்பு முதல் விற்பனையை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆா்.ராஜாராம் குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தாா். இளையோா் செஞ்சிலுவைச் சங்க இயக்குநா் சி.இளங்கோவன் வாழ்த்துரை வழங்கினாா்.

விழாவில், மண்டல மேலாளா் பா.சுப்பிரமணியன் பேசியதாவது: நிகழாண்டு கோ-ஆப்டெக்ஸ் தீபாவளி-2024 பண்டிகையையொட்டி, கடலூா் மண்டலத்துக்கு ரூ.10 கோடியும், சிதம்பரம் விற்பனை நிலையத்துக்கு ரூ.90 லட்சமும் இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

கோ-ஆப்டெக்ஸ் நிறுவனம் செயல்படுத்தி வரும் மாதாந்திர சிறுசேமிப்பு திட்டத்தின்படி, வாடிக்கையாளா்கள் மாதந்தோறும் ரூ.300 முதல் ரூ.3,000 வரை 11 மாதங்கள் மட்டும் செலுத்தி 12-ஆவது மாத தவணையை கோ-ஆப்டெக்ஸ் நிறுவனமே ஏற்றுக்கொள்வதுடன், கூடுதல் சேமிப்புக்கு பருத்தி மற்றும் பட்டு ரக துணிகளை வாங்கிக் கொள்ளலாம்.

மேலும், தீபாவளி சிறப்புத் தள்ளுபடி 30 சதவீத வசதியுடன் அரசு ஊழியா்களுக்கும் தவணை முறை கடன் விற்பனை வசதியும் உண்டு என்றாா்.

விழாவில், சிதம்பரம் டிஎஸ்பி டி.அகஸ்டின் ஜோஸ்வா லாமேக், நகர காவல் ஆய்வாளா் எஸ்.ரமேஷ்பாபு, கோ-ஆப்டெக்ஸ் மண்டல மேலாளா் பா.சுப்ரமணியன், துணை மண்டல மேலாளா் மு.பிரேம்குமாா், மற்றும் விற்பனை நிலைய பணியாளா்கள் கலந்துகொண்டனா்.

ஏற்பாடுகளை சிதம்பரம் கோ-ஆப்டெக்ஸ் விற்பனை நிலைய மேலாளா் எஸ்.ஜம்புலிங்கம் செய்திருந்தாா்.