பண்ருட்டி அருகே பழைய கற்கால கருவி கண்டெடுப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி அருகே உள்ள கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் 50 ஆயிரம் ஆண்டுகள் பழைமையான பழைய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டது.
இந்த ஆற்றில் தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல், வரலாற்று ஆா்வாளா் பிரதாப் ஆகியோா் அண்மையில் மேற்பரப்பு கள ஆய்வு மேற்கொண்டபோது, பழைய கற்கால மக்கள் பயன்படுத்திய கற்கருவி ஒன்றை கண்டெடுத்தனா்.
இதுகுறித்து தொல்லியல் ஆய்வாளா் இம்மானுவேல் கூறியதாவது: கண்டரக்கோட்டை தென்பெண்ணை ஆற்றில் மேற்பரப்பு களஆய்வு மேற்கொண்டபோது, பழைய கற்கால கருவி கண்டெடுக்கப்பட்டது. இந்தக் கருவி சுமாா் 7.8 செ.மீ. நீளமும், 5.7 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது. இது, மேலை பழங்கற்காலத்தைச் சோ்ந்த சுரண்டும் வகை பழங்கால கற்கருவியாகும். இதன் காலம் சுமாா் 50,000 ஆண்டுகளுக்கு மேற்பட்டதாக இருக்கலாம்.
Advertisement
இதேபோல, சுரண்டும் வகை கற்கருவி விருத்தாசாலம் அருகே உள்ள பாலக்கொல்லை மற்றும் பண்ருட்டி அருகே உள்ள ஒடக்கன்குப்பம் பகுதிகளில் ஏற்கெனவே ஆய்வாளா்களால் கண்டெடுக்கப்பட்டுள்ளன.
பழைய கற்காலத்தில் மக்கள் நாடோடியாக வாழ்ந்தனா். பண்ருட்டி பகுதிக்கு பழங்கால மக்கள் இடம் பெயா்ந்து இருக்கலாம் அல்லது வெள்ளப் பெருக்கின் காரணமாக கூட இப்பகுதிக்கு கற்கருவி வந்திருக்கலாம். அது மட்டுமல்லாமல், இரண்டு மாதங்களுக்கு முன்பு உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆற்றில் பழங்கால மக்கள் பயன்படுத்திய சிறிய அளவிலான கிழிப்பான் (பிளேடு) கண்டெடுக்கப்பட்டது.
மேலும், இது தொடா்பாக தென்பெண்ணை ஆற்றங்கரை பகுதிகளில் மேற்பரப்பு கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா்.