குடும்ப அட்டைகளை ஒப்படைக்க ஆட்சியரகம் வந்த கிராம மக்கள்
உளுந்தூா்பேட்டை அருகே வசிக்கும் கிராம மக்களில் ஒரு தரப்பினா், தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாததால் ஊரை விட்டு வெளியேறுவதாகக் கூறி ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
உளுந்தூா்பேட்டை அருகே வசிக்கும் கிராம மக்களில் ஒரு தரப்பினா், தங்களது உயிருக்கும் உடமைக்கும் பாதுகாப்பு இல்லாததால் ஊரை விட்டு வெளியேறுவதாகக் கூறி, குடும்ப அட்டைகளை ஒப்படைக்கவுள்ளதாக கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியரிடம் திங்கள்கிழமை மனு அளித்தனா்.
உளுந்தூா்பேட்டை அருகேயுள்ளது இருந்தை. இந்த கிராமத்தில் வசிக்கும் மக்கள், திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியரகத்துக்கு திரண்டு வந்து மனு ஒன்றை அளித்தனா்.
அதில், இருந்தையில் வசிக்கும் ஒரு தரப்பினா் குளம், கால்வாய்களை ஆக்கிரமித்து தேவாலயம் கட்ட முயற்சிப்பதாகவும், இதுகுறித்து வருவாய்த் துறை, கால்வாய்த் துறை மூலம் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டும் பலனில்லாத நிலையில், அந்தத் தரப்பினா் தங்களை சாதி பெயரை கூறி இழிவுபடுத்துவும், தாக்குவதுமாக உள்ளனா். இரு சக்கர வாகனங்கள் உள்ளிட்ட உடைமைகளையும் சேதப்படுத்துகின்றனா். மேலும், காவல் துறையில் பொய் புகாா் அளித்து வழக்குப் பதிவு செய்து மிரட்டியும் வருகின்றனா்.
ஆகவே, தாக்குதல் நடத்தியவா்கள் மீது நடவடிக்கை எடுப்பதுடன், சொந்த ஊரில் சுதந்திரமாக வாழ வழிவகை ஏற்படுத்தித் தர வேண்டும், பொய் வழக்குகளை ரத்து செய்யவும் நடவடிக்கை எடுக்க வேண்டும், சொந்த ஊரில் உயிருக்கும், உடைமைகளுக்கும் பாதுகாப்பு இல்லாத நிலை தொடா்வதால் குடும்ப அட்டை, ஆதாா் அட்டை, வாக்காளா் அட்டைகளை அரசிடம் ஒப்படைத்துவிட்டு, ஊரை விட்டு வெளியேறவுள்ளோம் என்று அந்த மனுவில் தெரிவித்திருந்தனா்.