காவலர்களுக்கான தனி ஊதியத்தை நிறுத்தக் கூடாது: வி.சி.க.
காவலர்களுக்கான தனி ஊதியத்தை நிறுத்தக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
காவலர்களுக்கான தனி ஊதியத்தை நிறுத்தக்கூடாது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து இக்கட்சியின் புதுச்சேரி பிரதேச முதன்மை செயலர் தேவ.பொழிலன் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கை:
புதுச்சேரி காவல்துறையில் பணியாற்றும் காவலர்கள் முதல் அதிகாரிகள் வரை அனைவரும் 24 மணி நேரமும் பணியாற்றி வருவதும் பிற அரசு ஊழியர்களுக்கு வழங்கப்படும் சனி, ஞாயிறு விடுமுறைகள் இல்லாமல் பணியாற்றி வருவதும் அனைவரும் அறிந்தது.
அரசு மற்றும் மக்களுக்கான பாதுகாப்பாகவும் காவல்துறை உள்ளது.
சட்டம் ஒழுங்கு மற்றும் குற்ற நடவடிக்கைகள் பெரும் அளவில் தடுக்கப்படுகிறது. ஓய்வு, உறக்கம் இன்றி பணியாற்றுவதால் காவலர்கள் சலிப்பு, விரக்தி, மன உளச்சல் போன்ற மனநிலைகளையும் சந்திக்க வேண்டியுள்ளது.
விடுமுறைகள் இல்லாமல் பணியாற்றும் காரணத்தால், அதற்கான தனியாக ஜனவரி மாதத்தில் ஒருமாத கூடுதல் ஊதியம் பிரெஞ்சுக்காரர்கள் காலத்தில் இருந்தே நெடுங்காலமாக வழங்கப்பட்டு வருகிறது.
ஆனால், தற்போது புதுச்சேரி அரசு நிதி நெருக்கடி என்கிற காரணத்தை காட்டி, ஜனவரியில் தனியாக வழங்கப்படும் ஊதியத்தை நிறுத்த முயற்சி செய்வதாக தெரிகிறது. இது கண்டனத்திற்குரியது.
புதுச்சேரி அரசு எக்காரணத்தை காட்டியும் காவலர்களுக்கு வழங்கப்படும் ஜனவரி கூடுதல் ஊதியத்தை நிறுத்தாமல் வழங்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளார்.