அடகுக் கடை உரிமையாளர் கொலை வழக்கு: 4 ஆண்டுகளுக்கு பிறகு 3 பேர் கைது
புதுச்சேரியில் நகை அடகுக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 3 பேர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரியில் நகை அடகுக் கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 ஆண்டுகளுக்குப் பிறகு 3 பேர் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.
புதுவை ரெயின்போ நகரில் வசித்து வந்த ராதே ஷ்யாம் தூத், உருளையன்பேட்டையில் அடகுக் கடை நடத்தி வந்தார். இந்த நிலையில், கடந்த 5.4.2014 அன்று கடையிலேயே அவர், மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து உருளையன்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர். ஆனால், கடந்த 4 ஆண்டுகளாக துப்பு எதுவும் கிடைக்கவில்லை.
இந்த நிலையில், கொலையில் தொடர்புடைய ஜீவானந்தபுரம் மாரியம்மன் கோயில் வீதியைச் சேர்ந்த கோபி (எ) கோபிநாதன், தட்டாஞ்சாவடி சுப்பையா நகரைச் சேர்ந்த அருண் (எ) அருள்குமார் (30), தட்டாஞ்சாவடி கங்கையம்மன் கோயில் வீதியைச் சேரந்த ஜோதி (எ) சுயம் ஜோதி ( 29) ஆகிய மூவரை போலீஸார் சனிக்கிழமை இரவு கைது செய்தனர்.
இந்தக் கொலை சம்பவத்தில் துப்பு துலங்கியது எப்படி என்பது குறித்து டி.ஐ.ஜி. ராஜீவ் ரஞ்சன் செய்தியாளர்களிடம் ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது:
கொலையாளி கோபி, ராதே ஷ்யாம் தூதின் கடைக்கு அருகில் உள்ள சிமென்ட் கடையில் ஓட்டுநராகப் பணியாற்றி வந்த நிலையில், நகைக் கடையை நோட்டம் விட்டு வந்துள்ளார். நகைக் கடையில் அதிக வியாபாரம் நடப்பதைக் கண்ட அவர், கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டினார்.
அதன்படி, சுயம்ஜோதி ராதே ஷ்யாம் தூதின் கடைக்கு சென்று போலியான பெயர், முகவரியில் நகை ஒன்றை அடமானம் வைத்துள்ளார். மறுநாள் சுயம்ஜோதி அருணுடன் சென்று நகையை மீட்கச் சென்றுள்ளார்.
ராதே ஷ்யாம் தூத் லாக்கரில் இருந்து நகையை எடுக்க உள்ளே சென்ற போது, இருவரும் பின்தொடர்ந்து சென்று அவரை கத்தியால் குத்திக் கொன்று, லாக்கரில் இருந்த தங்க நகைகளைக் கொள்ளையடித்து வெளியே காரில் காத்திருந்த சுயம்ஜோதியுடன் தப்பிச் சென்றுள்ளனர்.
கொள்ளையடிக்கப்பட்ட நகைகளை மொத்தமாக விற்காமல், கோபியின் உறவினர் கோகுலகிருஷ்ணனின் உதவியுடன் பல வங்கிகள், அடகுக் கடைகளில் வைத்தும், விற்றும் பணத்தைப் பெற்றுள்ளனர். அந்தப் பணத்தில் கார் உள்ளிட்ட வாகனங்கள், நிலங்களை வாங்கியுள்ளனர். மேலும், ரூ. 30 லட்சம் மதிப்புள்ள நகைகளை வாங்கி, அதனை வங்கிகளில் வைத்துள்ளனர்.
இவர்களை உளவுப் பிரிவு மூலம் கண்காணித்து வந்த தனிப்படை போலீஸார் கைது செய்தனர். அடகு வைக்கப்பட்ட நகைகள், வங்கியில் வைத்துள்ள நகைகள், சொத்துகளைப் பறிமுதல் செய்யும் பணி நடைபெற்று வருகிறது. நகைகளை விற்க உதவி செய்த கோகுலகிருஷ்ணனை தேடி வருகிறோம் என்றார் அவர்.