நுகர்வோர் தின விழிப்புணர்வு பயிலரங்கம்
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் நுகர்வோர் தின விழிப்புணர்வுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி அருகே தவளக்குப்பத்தில் நுகர்வோர் தின விழிப்புணர்வுப் பயிலரங்கம் சனிக்கிழமை நடைபெற்றது.
மாநில உணவு விவகாரங்கள் துறை, தமிழ்நாடு - புதுச்சேரி நுகர்வோர் அமைப்புகளின் கூட்டமைப்பு (பெட்காட்), புதுச்சேரி ஸ்ரீசிவசக்தி நுகர்வோர் அமைப்பு ஆகியவை இணைந்து நுகர்வோர் தின விழிப்புணர்வுப் பயிலரங்கை தவளக்குப்பம் ராமதாஸ் நகரில் நடத்தின. புதுச்சேரி ஸ்ரீசிவசக்தி நுகர்வோர் அமைப்பின் தலைவி நாகரத்தினம் வரவேற்றார். பெட்காட் அமைப்பின் புதுச்சேரி மாவட்டச் செயலர் கலியபெருமாள் தலைமை வகித்தார். ஓய்வு பெற்ற நீதிபதி வைத்தியநாதன் சிறப்பு விருந்தினராகக் கலந்து விழிப்புணர்வு பற்றிய கருத்துகளை எடுத்துக் கூறினார். புதுச்சேரி நுகர்வோர் கூட்டமைப்பின் தலைவர் அழகிரி, தமிழ்நாடு - புதுச்சேரி நுகர்வோர் குழுக்களின் கூட்டமைப்பின் மாநில துணைத் தலைவர் ராசமோகன், மாவட்டச் செயலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் உணவு கலப்படத்தைத் தடுப்பது குறித்தும், நுகர்வோர் உரிமைச் சட்டங்கள் குறித்தும் விளக்கிப் பேசினர்.
கடலூர் துறைமுக வீட்டு வசதி வாரியக் குடியிருப்போர் நலச் சங்கத்தின் தலைவர் முனுசாமி, பெட்காட் மண்டல ஒருங்கிணைப்பாளர் கணேசன், சட்ட ஆலோசகர் முருகன், நுகர்வோர் - சமூக சட்ட விழிப்புணர்வுச் சேவை மையப் பொதுச் செயலர் தமிழ்மணி, பெட்காட் இணைச் செயலர் கலியமுர்த்தி, சித்த மருத்துவர்கள் மோகன்தாஸ், சண்முகம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.