கட்சி மேலிடம் அழைப்பு: பாஜக நியமன எம்எல்ஏக்கள் தில்லியில் முகாம்
பாஜக மேலிடத்தின் அவசர அழைப்பின் பேரில் புதுதில்லிக்குச் சென்ற பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
பாஜக மேலிடத்தின் அவசர அழைப்பின் பேரில் புதுதில்லிக்குச் சென்ற பாஜக நியமன எம்.எல்.ஏ.க்கள் அங்கு முகாமிட்டுள்ளனர்.
புதுவையில் முதல்வர் வே.நாராயணசாமி தலைமையிலான காங்கிரஸ் அரசு பொறுப்பேற்ற 15 மாதங்களாக நியமன எம்.எல்.ஏ.க்களை மத்திய உள்துறைக்கு பரிந்துரைக்கவில்லை.
இந்த நிலையில், பாஜகவை சேர்ந்த மாநிலத் தலைவர் வி. சாமிநாதன், நிர்வாகிகள் கே.ஜி.சங்கர், எஸ். செல்வ
கணபதி ஆகிய 3 பேரை நியமன எம்எல்ஏக்களாக நியமித்து மத்திய உள்துறை உத்தரவிட்டது.
இதற்கு பேரவைத் தலைவர் மறுத்ததைத் தொடர்ந்து, அவர்களுக்கு ஆளுநர் மாளிகையில் கிரண் பேடி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
இதை எதிர்த்து தொடுக்கப்பட்ட வழக்கில், மத்திய உள்துறையின் நியமனம் செல்லும் என்று, சென்னை உயர் நீதிமன்றம் கடந்த மார்ச் 22-ஆம் தேதி தீர்ப்பு அளித்தது.
இருப்பினும், நியமன எம்.எல்.ஏ.க்களை மார்ச் 26-ஆம் தேதி நடைபெற்ற சட்டப்பேரவைக் கூட்டத்தில் பங்கேற்க பேரவைத் தலைவர் அனுமதிக்கவில்லை. இது தொடர்பான வழக்கில் எம்எல்ஏக்களின் நியமனம் செல்லும் என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
இதற்கிடையே இந்த வழக்கின் தீர்ப்பை எதிர்த்து லட்சுமிநாராயணன் எம்எல்ஏ உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு இன்னும் ஓரிரு நாள்களில் விசாரணைக்கு வரவுள்ளது.
இதனிடையே, நியமன எம்எல்ஏக்கள் விவகாரம் தொடர்பாக முதல்வர் நாராயணசாமி, ராகுல்காந்தி மற்றும் கட்சித் தலைவர்களை சந்தித்துப் பேசினார். பின்னர் புதுச்சேரிக்கு வந்து காங்கிரஸ் எம்எல்ஏக்களுடன் ஆலோசனையும் நடத்தினார். இதையடுத்து நியமன எம்எல்ஏக்கள் சட்டப்பேரவைக்குள் அனுமதிக்கப்படலாம் என்ற தகவல் பரவியது.
புதுவையின் இடைக்கால நிதிநிலை அறிக்கை கூட்டத்தொடரில், நீதிமன்றம் உத்தரவிட்டும் தங்களை அனுமதிக்காதது குறித்து 3 பாஜக எம்எல்ஏக்களும் உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கை நேரில் சந்தித்து புகார் கூறினர். ஆளுநர் கிரண் பேடியும் தலைமைச் செயலாளர் மூலமாக அறிக்கை பெற்று தனது கருத்தையும் மத்திய உள்துறைக்கு அனுப்பியிருந்தார். இந்த நிலையில், நியமன எம்எல்ஏக்களை தில்லிக்கு வரும்படி பாஜகவின் தேசிய தலைமை அழைப்பு விடுத்தது. இதையடுத்து அவர்கள் தில்லிக்கு திங்கள்கிழமை புறப்பட்டுச் சென்றனர்.
அங்கு கட்சியின் முக்கிய நிர்வாகிகளை சந்தித்துப் பேசினர். தொடர்ந்து, உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் உள்ளிட்டோரையும் சந்திக்கின்றனர்.
இந்த சந்திப்பின்போது உச்ச நீதிமன்றம் எந்தவித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில் பேரவைத் தலைவர் தங்களை சட்டப்பேரவைக்குள் அனுமதிப்பது தொடர்பாக இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை.
அதோடு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் நேரடி கட்டுப்பாட்டில் இருக்கும் யூனியன் பிரதேசமான புதுவை, மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களை தூண்டி விடுகிறது. முதல்வர், அமைச்சர்களே மத்திய அரசுக்கு எதிராக போராட்டங்களில் பங்கேற்கின்றனர் போன்ற பல்வேறு புகார்களை அளிக்கவுள்ளதாக மாநில பாஜக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.