தேசிய செயல் திட்ட போட்டி: பொறியியல் கல்லூரி முதலிடம்
தேசிய அளவிலான செயல் திட்டம் சமர்ப்பிக்கும் போட்டியில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
தேசிய அளவிலான செயல் திட்டம் சமர்ப்பிக்கும் போட்டியில் புதுச்சேரி மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரி மாணவர்கள் முதலிடம் பிடித்தனர்.
தெலங்கானா மாநிலத்தில் உள்ள எஸ்.ஆர்.பொறியியல் கல்லூரியில் தேசிய அளவிலான செயல் திட்டம் சமர்ப்பித்தல் போட்டி அண்மையில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் புதுமையான செயல் திட்ட படைப்புகளை சமர்ப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டது. போட்டியில் நாடு முழுவதும் இருந்து 150 செயல் திட்டங்களைப் பல்வேறு தொழில் துறை நிறுவனங்களில் பணியாற்றுவோர், கல்லூரி மாணவர்கள் சமர்ப்பித்தனர். இதில் முதல் சுற்றில் தகுதியான 50 செயல் திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டன.
தொடர்ந்து, 2-ஆவது சுற்றில் 10 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, செயல்முறை வடிவில் பார்வைக்கு சமர்ப்பிக்கப்பட்டன. இறுதியில் 3 திட்டங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு பரிசுத் தொகை வழங்கப்பட்டது. இதில், புதுச்சேரி மதகடிப்பட்டு ஸ்ரீ மணக்குள விநாயகர் பொறியியல் கல்லூரியில் பயிலும் இயந்திரவியல் துறை மூன்றாம் ஆண்டு மாணவர்கள் டுரோக்டேனியல், ராம்குமார், கோகுலகிருஷ்ணன் ஆகிய மாணவர்கள் முதல் பரிசைத் தட்டிச் சென்றனர்.
போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுத் தொகையாக ரூ. ஒரு லட்சம் வழங்கப்பட்டது. மேலும், இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தவும் வாய்ப்பு வழங்கப்பட்டது.
வெற்றி பெற்ற மாணவர்களை மணக்குள விநாயகர் கல்விக் குழுமத் தலைவர் எம். தனசேகரன், துணைத் தலைவர் எஸ்.வி.சுகுமாறன், செயலர் நாராயணசாமி கேசவன், கல்லூரி இயக்குநர் வெங்கடாசலபதி, துறைத் தலைவர் வேல்முருகன் ஆகியோர் பாராட்டினர்.