உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வலியுறுத்தல்
புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என உள்ளாட்சிக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
புதுவையில் உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்த வேண்டும் என உள்ளாட்சிக் கூட்டமைப்பு வலியுறுத்தியது.
புதுவையில் கடந்த 8 ஆண்டுகளாக உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல், ஆட்சியாளர்கள் அரசியல் அமைப்புச் சட்டத்தை முடக்கிப் போட்டுள்ளனர். இத்தகைய நடவடிக்கைகள் சட்டப்படி குற்றம் என நீதிமன்றங்கள் சுட்டிக்காட்டியும், தேர்தலை நடத்த வலியுறுத்தியும் உள்ளாட்சித் தேர்தலை நடத்தாமல் பஞ்சாயத்து ராஜ் சட்டத்தையும், அரசியலமைப்புச் சட்டத்தையும் அவமதித்து வருகின்றனர்.
உள்ளாட்சித் தேர்தலை நடத்தாததால் மத்திய அரசிடமிருந்து கிடைக்க வேண்டிய ரூ. 420 கோடி நிதியையும் வேண்டாம் என அரசு உதறித்தள்ளி விட்டு நகர, கிராமங்களில் சுகாதாரப் பணிகள், குடிநீர், தெருவிளக்கு, சாலை வசதி உள்ளிட்ட அடிப்படைக் கட்டமைப்புகளைச் செய்ய மறுத்து வருவது கடும் கண்டனத்துக்குரியதாகும். அதேபோல, கடந்த 3 ஆண்டுகளாக காலியாக உள்ள மாநிலத் தேர்தல் ஆணையர் பதவியையும் நிரப்ப வேண்டும். மாநில முதல்வரும், துணை நிலை ஆளுநரும் இந்தப் பிரச்னையில் தலையிடாமல் மற்ற விஷயங்களில் குழாயடிச் சண்டையிட்டு வருகின்றனர்.
எனவே, உள்ளாட்சித் தேர்தலை விரைந்து நடத்தவும், மாநிலத் தேர்தல் ஆணையர் பணியிடத்தை நிரப்பவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என புதுவை மாநில உள்ளாட்சி கூட்டமைப்பு வலியுறுத்தியுள்ளது.