சபரிமலை விவகாரம்: ஐயப்ப பக்தர்கள் பேரணி
புதுச்சேரியில் சபரிமலை விவகாரம் தொடர்பாக ஐயப்ப பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.
புதுச்சேரியில் சபரிமலை விவகாரம் தொடர்பாக ஐயப்ப பக்தர்கள் ஞாயிற்றுக்கிழமை பேரணி நடத்தினர்.
கேரளத்தில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலுக்கு 10 வயதுக்குக் கீழ், 50 வயதுக்கு மேலுள்ள பெண்கள் மட்டுமே அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நடைமுறையை மாற்றி அனைத்துப் பெண்களும் கோயிலில் தரிசனம் செய்யலாம் என்று உச்ச நீதிமன்றம் அண்மையில் உத்தரவிட்டது.
இந்த உத்தரவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து கேரளத்தில் மட்டுமன்றி, தமிழகம், புதுச்சேரியிலும் ஐயப்ப பக்தர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
அதன்படி, சபரிமலை ஐயப்ப சேவா சமாஜம் சார்பில் சரண கோஷ ஆன்மிகப் பேரணி புதுச்சேரியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சுதேசி மில்லிலிருந்து தொடங்கிய பேரணி கோவிந்த சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் நிறைவடைந்தது. இந்தப் பேரணியில், 10 வயது முதல் 50 வயது வரையுள்ள பெண்கள் சபரிமலைக்கு சென்று ஐயப்பனை தரிசனம் செய்ய மாட்டோம், சபரிமலையின் புனிதத்தைப் போற்றி பாதுகாக்க அனைத்து வயது பெண்களும் ஒன்றிணைந்து உறுதிமொழி ஏற்போம் என உறுதியளிக்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தப்பட்டது. பேரணியில் திரளான ஆண், பெண் ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.