புதுவை கம்பன் கழகம் சார்பில், கம்பன் கழகத் தலைவர் ந.கோவிந்தசாமியின் நினைவேந்தல் நிகழ்வு புதுச்சேரி தனியார் மண்டபத்தில் சனிக்கிழமை இரவு நடைபெற்றது.
நிகழ்வுக்கு கம்பன் கழகத் தலைவர் வே.பொ.சிவக்கொழுந்து தலைமை வகித்தார். பொருளாளர் சு.செல்வகணபதி முன்னிலை வகித்தார். ந.கோவிந்தசாமி படத்தை புதுவை முதல்வரும், கம்பன் கழகப் புரவலருமான வே.நாராயணசாமி திறந்து வைத்தார். தொடர்ந்து, ந.கோவிந்தசாமியின் நினைவலைகளைப் பகிர்ந்து கொண்டதுடன், அவர் தமிழுக்காற்றிய தொண்டுகளை முதல்வர் நாராயணசாமி புகழ்ந்து பேசினார். இதையடுத்து, புதுச்சேரி மக்களவை உறுப்பினர் வெ. வைத்திலிங்கம், திமுக அமைப்பாளர் எஸ்.பி. சிவக்குமார், பல்வேறு ஊர்களிலிருந்து வந்திருந்த தமிழறிஞர்கள், கம்பன் கழக நிர்வாகிகள் பேசினர். நிகழ்வில் தமிழ் ஆர்வலர்கள், புதுச்சேரி மற்றும் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த கம்பன் கழக உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.