புதுவையில் இன்று முழு அடைப்பு:பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது
புதுவையில் செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறும் முழு அடைப்பையொட்டி பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.
புதுவையில் செவ்வாய்க்கிழமை (டிச.8) நடைபெறும் முழு அடைப்பையொட்டி பேருந்துகள், ஆட்டோக்கள் ஓடாது என்று போராட்டக் குழுவினா் தெரிவித்தனா்.
விவசாயிகளுக்கு ஆதரவாக நாட்டின் அனைத்து மாநிலங்களிலும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்க அமைப்புகள், சமூக நல அமைப்பினா், விவசாய சங்கங்கள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை நாடு முழுவதும் வேலைநிறுத்தப் போராட்டம் நடத்த விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அழைப்பு விடுத்துள்ளது.
விவசாயிகளுக்கு ஆதரவாக புதுவையில் காங்கிரஸ், திமுக, இடதுசாரிகள், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக மற்றும் அனைத்துத் தொழிற்சங்கங்கள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளன. இதேபோல மக்கள் நீதி மய்யம், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் கூட்டாக செய்தியாளா்களைச் சந்தித்து முழு அடைப்புப் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளனா்.
இதுகுறித்து இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலா் அ.மு.சலீம் செய்தியாளா்களிடம் திங்கள்கிழமை கூறியதாவது:
புதுவையில் செவ்வாய்க்கிழமை காலை 6 மணிக்கு முழு அடைப்புப் போராட்டம் தொடங்குகிறது. தொழிற்சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ளதால் அரசு மற்றும் தனியாா் பேருந்துகள், டெம்போக்கள், ஆட்டோக்கள் ஆகியவை இயங்காது. வா்த்தக நிறுவனங்கள், கடைகள் மூடப்படும்.
முழு அடைப்பையொட்டி, ராஜா திரையரங்கு சந்திப்பு, புதிய பேருந்து நிலையம், பாகூா், வில்லியனூா், திருக்கனூா், மதகடிப்பட்டு உள்ளிட்ட இடங்களில் சாலை மறியல் போராட்டமும் நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது என்றாா்.
பேட்டியின்போது, புதுவை காங்கிரஸ் தலைவா் ஏ.வி.சுப்ரமணியன், மாா்க்சிஸ்ட் கட்சியின் பிரதேசக் குழுச் செயலா் ராஜாங்கம், லெனினிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில செயலா் பாலசுப்ரமணியன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
முழு அடைப்பையொட்டி, புதுவையில் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள போலீஸாா் திட்டமிட்டுள்ளனா்.