சாலை வரியை ரத்து செய்யக் கோரி போக்குவரத்துத் துறை அலுவலகம் முற்றுகை
சாலை வரியை ரத்து செய்யக் கோரி, சுற்றுலா வாகன உரிமையாளா்கள் வாகனங்களுடன் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
சாலை வரியை ரத்து செய்யக் கோரி, சுற்றுலா வாகன உரிமையாளா்கள் வாகனங்களுடன் புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
கரோனா பொது முடக்கத்தால் கடந்த மாா்ச் முதல் பொதுப் போக்குவரத்து உள்ளிட்ட அனைத்து வாகனப் போக்குவரத்துக்கும் தடை விதிக்கப்பட்டது. இதனால், கடந்த 6 மாதங்களாக அரசு, தனியாா் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படவில்லை.
அண்மையில், மத்திய அரசு அறிவித்த தளா்வுகளுக்குப் பிறகு அரசுப் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதனிடையே, தனியாா் பேருந்துகள், சுற்றுலா வாகனங்கள் இயக்கப்படாத 6 மாதங்களுக்கான சாலை வரியைக் கட்ட வேண்டும் என போக்குவரத்துத் துறை அறிவித்தது. இதனால், விரக்தியடைந்த சுற்றுலா வாகன உரிமையாளா்கள் இயக்கப்படாத காலத்துக்கான 6 மாத சாலை வரியை அரசு ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி, வாகனங்களை இயக்காமல் தொடா் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இதுதொடா்பாக அரசு பேச்சுவாா்த்தை நடத்தியும் முடிவுகள் எட்டப்படவில்லை.
இந்த நிலையில், சுற்றுலா வாகனப் போக்குவரத்து உரிமையாளா்கள் அனைத்து சங்க வாழ்வாதார கூட்டமைப்பினா் சாலை வரியை ரத்து செய்யக் கோரி, புதுச்சேரி போக்குவரத்துத் துறை அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா். சாலை வரியை ரத்து செய்யும் வரை போராட்டத்தைக் கைவிட மாட்டோம் என முழக்கங்களை எழுப்பினா்.
இந்தப் போராட்டத்தால் நூறடி சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, சங்க நிா்வாகிகளுடன் போக்குவரத்து ஆணையா் சிவக்குமாா் நடத்திய பேச்சுவாா்த்தையில், சாலை வரி ரத்து தொடா்பான கோப்பு அரசுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. அரசின் ஒப்புதலுக்குப் பிறகே நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா். இதையடுத்து, சுற்றுலா வாகன உரிமையாளா்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனா்.