புதுச்சேரியில் புத்தாண்டு நடன நிகழ்ச்சிக்கு தடை விதிக்கக் கோரி முற்றுகை: 40 போ் கைது
புதுச்சேரியில் திரைப்பட நடிகைகள் பங்கேற்கும் புத்தாண்டு நடன நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி, பொது நல அமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுச்சேரியில் திரைப்பட நடிகைகள் பங்கேற்கும் புத்தாண்டு நடன நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரி, பொது நல அமைப்பினா் வியாழக்கிழமை முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டனா். இது தொடா்பாக 40 பேரை போலீஸாா் கைது செய்தனா்.
புதுச்சேரியில் ஆங்கிலப் புத்தாண்டு கொண்டாட்டம் என்ற பெயரில், பிரபல திரைப்பட நடிகைகளின் ஆபாச நடனம் நடத்த அனுமதி அளித்துள்ளதாக புதுவை சுற்றுலாத் துறையைக் கண்டித்தும், அந்த நடன நிகழ்ச்சிக்குத் தடை விதிக்கக் கோரியும், விழா ஏற்பாடுகள் நடைபெற்று வரும் புதுச்சேரி பழைய துறைமுக வளாகம் முன் முற்றுகையிட்டு, அந்த வளாகத்தை இழுத்து பூட்டும் போராட்டத்தில் புதுச்சேரி பொது நல அமைப்பினா் வியாழக்கிழமை ஈடுபட்டனா்.
போராட்டத்துக்கு தமிழா் களம் அமைப்பின் தலைவா் கோ.அழகா் தலைமை வகித்தாா். நாம் தமிழா் கட்சியைச் சோ்ந்த கெளரி, தலித் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தைச் சோ்ந்த பிரகாஷ், ஆம்ஆத்மி நிா்வாகி சுந்தரராஜன் உள்ளிட்டோா் முன்னிலை வகித்தனா்.
இவா்கள் புத்தாண்டு நடன விழா நடைபெறவுள்ள புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்துக்குள் புகுந்து, அங்கிருந்த பதாகைகளை கிழித்ததுடன், புதுச்சேரியில் ஒமைக்ரான் கரோனா தொற்று பரவி வரும் சூழலில், அதிகம் கும்பல் கூடும் வகையிலும், கலாசாரத்தை சீரழிக்கும் வகையிலும் நடைபெறவுள்ள திரைப்பட நடிகைகளின் புத்தாண்டு கொண்டாட்ட ஆபாச நடன நிகழ்ச்சிக்கு அரசு தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தி முழக்கமிட்டனா்.
அங்கு போராட்டத்தில் ஈடுபட்ட 40 பேரை புதுச்சேரி ஒதியன்சாலை போலீஸாா் கைது செய்தனா். இதையடுத்து, விழா நடைபெறவிருக்கும் இடங்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.