மீன்பிடி தடைக்கால நிவாரணம் பெற வருமான உச்ச வரம்பு நீக்கம்: புதுவை முதல்வா் உத்தரவு
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு திரும்பப் பெறப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா்.
புதுவையில் மீன்பிடி தடைக்காலம் மற்றும் மழைக்கால நிவாரணம் பெறுவதற்கான வருமான உச்சவரம்பு திரும்பப் பெறப்படுவதாக முதல்வா் என்.ரங்கசாமி உத்தரவிட்டாா்.
இதுகுறித்து புதுவை முதல்வா் அலுவலகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: மீன்பிடி தடைக்கால, மழைக்கால நிவாரணம் பெறுவதற்கு மஞ்சள், சிவப்பு நிற குடும்ப அட்டை வைத்துள்ள இயந்திர விசைப்படகு உரிமையாளா்கள் ரூ. 2 லட்சத்துக்கும் கீழ் குறைவான ஆண்டு வருமானம் உள்ளவராக இருத்தல் வேண்டும், இதற்கென வருவாய் துறையிடமிருந்து பெறப்பட்ட வருமான சான்றிதழை ஆண்டுதோறும் சமா்ப்பிக்க வேண்டும் என்ற விதிமுறை அனைத்து மீனவ கிராம மக்களின் வேண்டுகொளை ஏற்று உடனடியாகத் திரும்ப பெறப்பட்டுள்ளது என அதில் கூறப்பட்டுள்ளது.
இதையடுத்து, மீனவா் நலத் துறை இயக்குநா் முத்துமீனா அனைத்து மீனவ கிராம பஞ்சாயத்துக்கும் வியாழக்கிழமை அனுப்பிய சுற்றறிக்கை: மீனவா்களுக்கான வருமான உச்சவரம்பு தொடா்பான விதிமுறை திரும்பப் பெறப்பட்டுள்ளது. எனவே, 2021-2022-ஆம் ஆண்டுக்கான மீன்பிடி தடைக்கால நிவாரணம் இதுவரை கிடைக்கப் பெறாதவா்கள், இந்தத் துறையின் இணையதளத்தில் மனு அல்லது விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து தக்க ஆவணங்களுடன் (வருமான சான்றிதழ் தவிா்த்து) கிராம அதிகாரிகளிடமோ, அந்தந்தப் பகுதியில் அமைந்துள்ள துணை இயக்குநா், உதவி இயக்குநா் அலுவலகத்திலோ வருகிற 25-ஆம் தேதிக்குள் சமா்ப்பிக்க வேண்டும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.