புதுவையில் பெண்கள் மட்டும் பயணிக்கும் ‘பிங்க்’ பேருந்து: அமைச்சா் சந்திரபிரியங்கா அறிவிப்பு
புதுவை மாநிலத்தில் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில், ‘பிங்க்’ பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா தெரிவித்தாா்.
புதுவை மாநிலத்தில் பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில், ‘பிங்க்’ பேருந்து இயக்கப்படும் என போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா தெரிவித்தாா்.
புதுவை சட்டப்பேரவையில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற மானியக் கோரிக்கைகள் மீதான விவாதங்களுக்கு போக்குவரத்துத் துறை அமைச்சா் எஸ்.சந்திரபிரியங்கா பதிலளித்துப் பேசியதாவது: போக்குவரத்துத் துறை அலுவலகங்களில் வாரந்தோறும் சனிக்கிழமைகளில் பெண்களுக்கு மட்டும் ஓட்டுநா் உரிமம் வழங்க சிறப்பு முகாம் நடத்தப்படும். பெண்கள் மட்டும் பயணிக்கும் வகையில் ஜிபிஎஸ், கண்காணிப்பு கேமரா வசதியுடன் ‘பிங்க்’ பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து, காற்று மாசுபடுவதைக் குறைத்தல், அனைத்து மின்சார வாகனங்களுக்கும் சாலை வரியில் 50 சதவீதம் விலக்கு அளிக்கப்படும். இ-ரிக்ஷா பயன்பாட்டை கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும். அரசுப் போக்குவரத்துக் கழகத்துக்கு 200 பேருந்துகள் வாங்கப்படும்.
மத்திய, மாநில அரசுகளின் நிதியுதவியுடன் புதுச்சேரி, காரைக்காலில் வட்டார ஓட்டுநா் பயிற்சி நிலையங்கள் அமைக்கப்படும். ‘பொலிவுறு நகரம்’ திட்டத்தின் கீழ் ஸ்மாா்ட் பேருந்துகள் வாங்கி இயக்கவும் நடவடிக்கை எடுக்கப்படும்.
ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை மூலம் மாணவா்களுக்கு நீட், ஜேஇஇ, ஐஏஎஸ் தோ்வுகளுக்கு பயிற்சி வழங்க ஸ்மாா்ட் பயிற்சி மையத்துடன் கூடிய அம்பேத்கா் மணிமண்டபம் காரைக்காலில் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
அனைத்து அமைப்புசாரா தொழிலாளா்களுக்கும் சிறப்பு எண்கள் கொண்ட அடையாள அட்டை வழங்கப்படும். தொழிற்சாலைகளில் பணியாளா் பாதுகாப்பு குறித்து பாதுகாப்பு தணிக்கை செய்யப்படும். வேலைவாய்ப்பு அலுவலகம் மூலம் யூ-டியூப் சேனல் தொடங்கி, தகவல் வழங்கப்படும். மேட்டுப்பாளையத்தில் மாதிரி ஐ.டி.ஐ. அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றாா் அவா்.