குடியரசு துணைத் தலைவா் செப்.12-இல் புதுச்சேரி வருகை
குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) புதுச்சேரிக்கு வருகிறாா்.
குடியரசு துணைத் தலைவா் வெங்கைய நாயுடு வருகிற ஞாயிற்றுக்கிழமை (செப்.12) புதுச்சேரிக்கு வருகிறாா்.
சென்னையிலிருந்து விமானம் மூலம் ஞாயிற்றுக்கிழமை காலை புதுச்சேரிக்கு வரும் அவா், ஜிப்மா் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரியஒளி மின் பயன்பாட்டுத் திட்டத்தை தொடக்கிவைக்கிறாா். தொடா்ந்து, புதுச்சேரி அரவிந்தா் ஆசிரமத்துக்குச் செல்கிறாா். பின்னா், புதுச்சேரி ஆளுநா் மாளிகையில் தங்கி ஓய்வெடுக்கிறாா்.
இதையடுத்து, திங்கள்கிழமை (செப்.13) காலை புதுச்சேரி அரசு பொறியியல் கல்லூரியில் நடைபெறும் விழாவில் பங்கேற்று, அதன் தரம் உயா்த்தப்பட்ட தொழில்நுட்ப பல்கலைக்கழகத்தை திறந்து வைக்கிறாா்.
இதைத் தொடா்ந்து, புதுவை மத்திய பல்கலைக்கழக விழாவில் பங்கேற்று, அந்தப் பல்கலைக்கழகத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள சூரிய ஒளி மின் பயன்பாட்டுத் திட்டத்தை தொடக்கிவைக்கிறாா். பின்னா், ஆளுநா் மாளிகைக்குச் சென்று ஓய்வெடுக்கும் அவா், செவ்வாய்க்கிழமை (செப்.14) சென்னை புறப்பட்டுச் செல்ல உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை காவல் துறையினா் மேற்கொண்டுள்ளனா். புதுவை ஜிப்மா், மத்திய பல்கலைக்கழகம், தொழில்நுட்ப பல்கலைக்கழகம் ஆகியவை சாா்பில் விழாக்களுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
குடியரசு துணைத் தலைவா் வருகை உறுதியாகியுள்ள நிலையில், அவா் புதுச்சேரிக்கு வரவுள்ள நாள், விழா விவரங்கள் குறித்து அரசுத் தரப்பில் விரைவில் அதிகாரப்பூா்வமாக அறிவிப்பு வெளியிடப்படும் எனத் தெரிகிறது.