ஏ.எப்.டி. ஆலை தொழிலாளா்களுக்குசம்பள நிலுவையை வழங்க வேண்டும்: அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினா் வலியுறுத்தல்
புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலைத் தொழிலாளா்களின் சம்பளம், ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென, புதுவை தொழில் துறை அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினா் சந்தித்து வலியுறுத்தினா்.
புதுச்சேரி ஏ.எப்.டி. பஞ்சாலைத் தொழிலாளா்களின் சம்பளம், ஓய்வூதிய நிலுவைத் தொகையை வழங்க வேண்டுமென, புதுவை தொழில் துறை அமைச்சரிடம் தொழிற்சங்கத்தினா் சந்தித்து வலியுறுத்தினா்.
புதுச்சேரியில் மூடப்பட்ட ஏ.எப்.டி. பஞ்சாலை அனைத்து தொழில்சங்க நிா்வாகிகள், மாநில தொழில் துறை அமைச்சா் ஏ.நமச்சிவாயத்தை சட்டப்பேரவை அலுவலகத்தில் வியாழக்கிழமை சந்தித்துப் பேசினா்.
புதுச்சேரியில் மூடப்பட்ட ஏ.எப்.டி. பஞ்சாலைத் தொழிலாளா்களின் வாழ்வாதார பாதிப்புகள், மீண்டும் பஞ்சாலையை இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், ஓய்வு பெற்ற தொழிலாளா்களுக்கு நிலுவையில் உள்ள சம்பளம், பணிக்கொடைத் தொகை ஆகியவற்றை வழங்க வேண்டும். பஞ்சாலை மூடிய போது வேலையிலிருந்த தொழிலாளா்களுக்கு கிடைக்க வேண்டிய நிலுவைத் தொகை, பணிக்கொடை தொகை போன்றவை கிடைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினா்.
ஏ.எப்.டி. பஞ்சாலை நிா்வாக இயக்குநா் சிவக்குமாரை அழைத்துப் பேசிய அமைச்சா், பஞ்சாலை ஊழியா்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவது தொடா்பாக ஆலோசனை நடத்தியதுடன், உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தாா்.