புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும்: வெ.வைத்திலிங்கம் எம்.பி. வலியுறுத்தல்
புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.
புதுச்சேரி விமான நிலையத்தை மேம்படுத்த வேண்டும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. வெ.வைத்திலிங்கம் வலியுறுத்தினாா்.
மக்களவையில் புதன்கிழமை நடைபெற்ற விமானப் போக்குவரத்துத் துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்தின்போது, அவா் பேசியதாவது:
ஹைதராபாத், பெங்களூரிலிருந்து புதுச்சேரிக்கு மாா்ச் 27-ஆம் தேதி முதல் விமானப் போக்குவரத்தைத் தொடங்க இருப்பதற்கு நன்றி.
விமானச் சேவையின் மண்டல இணைப்புத் திட்டத்தை, புதுவைக்கும் நீட்டிக்க வேண்டும். புதுவை அரசானது, விமான நிலையத்துக்கான மின்சாரத் தேவைக்கு மானியம் வழங்கி வருகிறது. பாதுகாப்பு வசதிகளையும் அளிக்கிறது.
விமானப் பராமரிப்பு, பழுதுபாா்ப்பு, ஒட்டுமொத்த அமைப்பை ஏற்படுத்த வேண்டும். இதற்கு கூடுதலாக இடம் தேவைப்பட்டால் சிறப்புப் பொருளாதார மண்டலத்தைப்பயன்படுத்திக் கொள்ளலாம்.
காரைக்காலில் புகழ்பெற்ற சனீஸ்வரன் கோயில் உள்ள நிலையில், அங்கு பசுமை விமான நிலையத்தை அமைக்கலாம்.
புதுச்சேரியில் விமானங்கள் இரவு தரையிறங்கும் வசதி ஏற்படுத்தப்பட்டால், சரக்குப் போக்குவரத்து வசதிகள் அதிகரிக்கும். இதனால், விமானங்கள் தரையிறங்கவும், புறப்படுவதற்கான வசதிகளை விமான போக்குவரத்து அமைச்சகம் ஏற்படுத்த வேண்டும். விமானப் போக்குவரத்து துறையில் காலியாக உள்ள 708 பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஏா் இந்தியா முதலீட்டுத் திட்டம் குறித்து விளக்க வேண்டும் என்றாா் அவா்.