புதுச்சேரி: புதுவை அரசு சட்டக் கல்லூரி பொன்விழா ஆண்டு நிறைவு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் பங்கேற்றார்.
புதுவை மாநிலம், புதுச்சேரி காலாப்பட்டில் டாக்டர் அம்பேத்கர் அரசு சட்டக்கல்லுாரி உள்ளது.
இந்தக் கல்லூரி தொடங்கப்பட்டு 50 ஆண்டுகள் சட்டக்கல்வி வழங்கி வரும் பணியினை கொண்டாடும் வகையில், பொன்விழா ஆண்டு கொண்டாட்டம் கடந்த ஆகஸ்ட் 2021-ல் துவங்கப்பட்டு பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்று வந்தன.
இதனையடுத்து பொன்விழா ஆண்டு கொண்டாட்ட நிறைவு விழா சட்ட கல்லூரி வளாகத்தில் சனிக்கிழமை காலை தொடங்கி நடைபெற்றது.
இந்நிறைவு விழாவில் சிறப்பு விருந்தினர்களாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி உதய் உமேஷ் லலித் கலந்துகொண்டு, பொன்விழா ஆண்டு நினைவு இதழை வெளியிட்டார்.
உச்சநீதிமன்ற நீதிபதி எம்.எம்.சுந்தரேஷ், ராம.சுப்பிரமணியன், புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன், சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, புதுவை முதல்வர் ரங்கசாமி, சட்டப்பேரவை தலைவர் செல்வம், சட்ட அமைச்சர் லட்சுமி நாராயணன் மற்றும் மக்களவை உறுப்பினர் செல்வகணபதி, அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், வழக்கறிஞர்கள், சட்டக்கல்லூரி மாணவர்கள் பலர் கலந்துகொண்டனர்.