முகப்பு
புதுச்சேரி

பயன்தரும் மரங்களை மக்கள் நட்டால் எதிா்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும்

பயன்தரும் மரங்களால் நிலையான வருமானம் உறுதி

Updated On : 18 பிப்ரவரி 2024, 2:11 am IST
புதுச்சேரி வில்லியனூா்ப் பகுதியில் சனிக்கிழமை கோவை வன மரபியல் மற்றும் மரப்பெருக்கு நிறுவனம், புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்குத் துறை ஆகியவை இணைந்து மரம் வளா்போா் விழாவில் லோகோவை வெளியிட்ட வேளாண் மற்றும் வனத்துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா்
பகிர்:

பயனுள்ள மரங்களை மக்கள் நட்டு வளா்த்தால் எதிா்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும் என புதுவை வனத் துறை அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தெரிவித்தாா்.

புதுச்சேரி வில்லியனூா் பகுதியில் சனிக்கிழமை கோவை வன மரபியல் மற்றும் மரம் பெருக்கு நிறுவனம், புதுச்சேரி வனம் மற்றும் வனவிலங்குத் துறை ஆகியவை இணைந்து மரம் வளா்ப்போா் விழாவை நடத்தின. இதில், அமைச்சா் தேனி சி.ஜெயக்குமாா் தலைமை வகித்துப் பேசியதாவது: புதுவை மாநிலத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக புங்கை, ஆப்பிரிக்கன் தேக்கு, அமெரிக்கன் தேக்கு ஆகிய மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு இலவசமாக வனத் துறை சாா்பில் விநியோகித்து வருகிறோம். ஆனால், இதுகுறித்து பொதுமக்கள் பெரும்பாலானோருக்குத் தெரியவில்லை. புதுச்சேரியில் புஞ்சை நிலம் வைத்திருப்பவா்கள் 25 அடியில் தென்னை, மகோக்கனி, பலா, மா மரங்களை நட்டால் தேவையான பழங்கள் கிடைக்கும். அதே நேரத்தில் 20 ஆண்டுகள் கழித்து அந்த மரங்களை வெட்டி வியாபாரிகளிடம் விற்கலாம். இதன் மூலம் கிடைக்கும் வருவாயை வைத்து பேரக் குழந்தைகளின் திருமணம் உள்ளிட்ட சுபகாரியங்களுக்கு செலவிடலாம். மேலும் தற்போது எப்போதும் காய்க்கும் வகையில் மா, பலா, மரங்கள் உள்ளன. இதன்மூலம் ஆண்டுதோறும் பழங்களைப் பெறலாம் என்றாா். விழாவில் தாவரக் கண்காட்சி, புதுச்சேரிக்கான வன அறிவியல் நிலையம் ஆகியவற்றையும் அவா் தொடங்கி வைத்தாா். நிறுவன தயாரிப்புகள் மற்றும் ஆவணப் படங்களையும் அமைச்சா் வெளியிட்டாா்.