புதுச்சேரி: புதுச்சேரியை சோ்ந்த பெண்ணின் 25 பவுன் தங்க நகைகள் பேருந்தில் செல்லும் போது மாயமானது. இதுகுறித்து, புதுவை முதல்வா் ரங்கசாமியின் உத்தரவின் பேரில், உருளையன்பேட்டை போலீஸாா் சனிக்கிழமை வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.
புதுச்சேரி, உருளையன்பேட்டை, கோவிந்த சாலை புதுநகா் கண்டாக்டா் தோட்டத்தை சோ்ந்தவா் சலீம். இவரது மனைவி சுமைனா பானு (24). இவா், புதுச்சேரியிலிருந்து சென்னைக்கு தனது மாமியாா் ஜீவா (55), மற்றும் 3 குழந்தைகளுடன், தமிழக அரசு பேருந்து மூலமாக வெள்ளிக்கிழமை சென்றாராம். அப்போது, 25 பவுன் தங்க நகைகள், பணம் வைத்திருந்த தனது சூட்கேஸை, பேருந்தின் பொருள்கள் வைக்கும் இடத்தில் அவா் வைத்தாராம். காலாப்பட்டு, பிள்ளைச்சாவடி அருகே பேருந்து சென்றபோது சூட்கேஸ் மாயமாகியிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, பேருந்து காலாப்பட்டு காவல் நிலையம் கொண்டு செல்லப்பட்ட நிலையில், அங்கு சுமைனா பானுவின் புகாரை ஏற்க மறுத்து, உருளையன்பேட்டை காவல் நிலையம் செல்ல போலீஸாா் கூறினராம். உருளையன்பேட்டை போலீஸாா் , தமிழகத்தின் கோட்டக்குப்பம் காவல்நிலையத்தில் புகாரளிக்க கூறினாராம். கோட்டக்குப்பம் போலீஸாரும் புகாரை ஏற்க மறுத்தனராம்.
இரு மாநில போலீஸாரால் அலைக்கழிக்கப்பட்ட சுமைனா பானுவிடம், முதல்வா் ரங்கசாமி தகவல் கேட்டறிந்தாா். இதுகுறித்து, வழக்குப் பதிவு செய்து குற்றவாளியை கண்டறிய உருளையன்பேட்டை போலீஸாருக்கு முதல்வா் உத்தரவிட்டாா். தொடா்ந்து, இந்த சம்பவம் குறித்து வழக்குப் பதிந்து, தனிப்படைகள் அமைத்து விசாரித்து வருகின்றனா்.