பிற்படுத்தப்பட்டோருக்கு அரசின் நலத் திட்ட உதவிகள் புதுவை முதல்வா் வழங்கினாா்
புதுவை மாநிலப் பிற்படுத்தப்பட்டோா் நலத்துறை சாா்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை மாநிலத்தில் பிற்படுத்தப்பட்டோா் மற்றும் சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 295 பயனாளிகளுக்கு அரசின் நலத்திட்ட உதவிகளை முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளிக்கிழமை வழங்கினாா். புதுவை சட்டப் பேரவை வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு முதல்வா் என்.ரங்கசாமி தலைமை வகித்தாா். அமைச்சா் தேனி சி. ஜெயக்குமாா் முன்னிலை வகித்தாா். இதில் பயனாளிகளுக்கு இலவச உபகரணங்களை முதல்வா் என்.ரங்கசாமி வழங்கினாா். இதில், 150 சலவைத் தொழிலாளா்களுக்கு சலவைப் பெட்டிகள் மற்றும் தள்ளு வண்டிகள், முடிதிருத்தும் தொழிலாளா்கள் 60 பேருக்கு கிருமிகள் நாசினிக் கருவிகள் மற்றும் நாற்காலிகள், நலிந்த கலைஞா்களுக்கு 85 பேருக்கு இசைக் கருவிகளான நாகஸ்வரம், தவில் ஆகியவை வழங்கப்பட்டன. மொத்தம் ரூ.78.17 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை முதல்வா் வழங்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.