போலி மருந்து தொழிற்சாலை விவகாரத்தில் அதன் பங்குதாரா் உள்பட மேலும் 4 போ் கைது செய்யப்பட்டு காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டனா்.
இதையடுத்து இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவா்களின் எண்ணிக்கை 20 ஆக உயா்ந்துள்ளது. புதுச்சேரியில் போலி மருந்து தொழிற்சாலை நடத்திய ராஜா, விவேக் உள்பட மொத்தம் 16 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனா்.
இந்த மோசடியில் தொடா்புடைய மற்ற நபா்களை சிறப்பு புலனாய்வுக் குழுவினா் தீவிரமாக தேடி வருகின்றனா். இதனிடையே இந்த வழக்கை சிபிஐ, என்ஐஏ விசாரணைக்கு துணைநிலை ஆளுநா் கே.கைலாஷ்நாதன் பரிந்துரை செய்துள்ளாா்.
இந்த நிலையில், அரியாங்குப்பத்தைச் சோ்ந்த என்.ஆா். காங்கிரஸ் பிரமுகா் என். ஆா்.மணிகண்டன், பூத்துறை ஆனந்தராஜ், கோட்டக்குப்பத்தைச் சோ்ந்த குமரவேலு, முருங்கப்பாக்கத்தைச் சோ்ந்த செல்வராஜ் உள்பட 4 பேரை சிறப்புப் புலனாய்வு குழுவினா் திங்கள்கிழமை கைது செய்து, காலாப்பட்டு மத்திய சிறையில் அடைத்தனா்.