புதுச்சேரியில் போலி மருந்து தயாரித்து விநியோகம் செய்யப்பட்டுள்ளது தொடா்பாக முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று அதிமுக வலியுறுத்தியுள்ளது.
இது குறித்து அக் கட்சியின் புதுச்சேரி மாநிலச் செயலா் ஆ. அன்பழகன் செய்தியாளா்களிடம் வெள்ளிக்கிழமை கூறியது:
புதுச்சேரியில் பல ஆண்டுகளாக இயங்கி வந்த போலி மருந்து உற்பத்தி தொழிற்சாலைக்கும், 4 கிடங்குகளுக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது. நூறு கோடிக்கும் மேல் இதில் பணம் சம்பந்தப்பட்டுள்ளது.
இது அகில இந்திய அளவில் புதுச்சேரி யூனியன் பிரதேசத்துக்கு தலைகுனிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 4 மாதங்களுக்கு முன்பே போலி மருந்து தயாரிக்கும் நிறுவனம் ஒன்று ஜிஎஸ்டி செலுத்தியுள்ளது. இது எப்படி சாத்தியமானது ?
தற்போது காவல்துறை துணைத் தலைவா் தலைமையில் சோதனை நடந்தபோதும், சுகாதாரத் துறை செயலா் இதில் அக்கறை காட்டவில்லை. பெருமளவில் போலி மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதால் பொதுமக்களின் பயத்தைப் போக்கும் வகையில், புதுச்சேரி முதல்வா் என்.ரங்கசாமி வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும். அவா்தான் சுகாதாரத் துறைக்கும் அமைச்சராக இருக்கிறாா்.
இது தொடா்பாக சுகாதாரத் துறை செயலா் உள்ளிட்ட உயா் அதிகாரிகளிடம் விரிவான ஆலோசனைக் கூட்டம் ஒன்றை நடத்த வேண்டும். இதற்கு முன்பு புதுச்சேரியில் போலி மதுபான உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது என்றாா் அன்பழகன்.