பல்கலை. பேராசிரியர் மீது பாலியல் புகார்: போராட்டம் நடத்திய மாணவர்கள் கைது!
புதுச்சேரியில் போராட்டம் நடத்திய மாணவர்கள் 24 பேர் நள்ளிரவில் கைது செய்யப்பட்டனர்.
புதுச்சேரி: புதுச்சேரி மத்திய பல்கலைக் கழகத்தில், பேராசிரியர் ஒருவர் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை அளித்ததாக எழுந்த புகாரின் பேரில், இந்திய மாணவர் சங்கத்தினர் நடத்திய போராட்டத்தில், 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களை காவல் துறையினர் வியாழக்கிழமை நள்ளிரவு கைது செய்தனர்.
இந்தப் பல்கலைக் கழகத்தின் காரைக்கால் கிளையில் பேராசிரியர் ஒருவர், மாணவி ஒருவருக்கு பாலியல் ரீதியான துன்புறுத்தல் செய்ததாகக் கூறப்படுகிறது.
இந்தப் புகார் தொடர்பாக, மாணவர்கள் திரண்டு, துணைவேந்தர் அலுலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
வியாழக்கிழமை மாலை தொடங்கிய இந்தப் போராட்டம், நள்ளிரவு வரை நீடித்த நிலையில், மாணவர்களை கலைக்கும் வகையில் போலீஸார், மாணவர்களை அடித்து போலீஸ் வாகனத்தில் ஏற்றியதாகக் கூறப்படுகிறது.
இதில் 6 மாணவிகள் உள்பட 24 மாணவர்களைக் காவல் துறையினர் கைது செய்தனர். வெள்ளிக்கிழமை காலை வரையிலும் அந்த மாணவர்களை போலீஸ் வேனிலேயே வைத்திருந்தனர்.
இதையும் படிக்க: காவல் அதிகாரிகள் அறிவுறுத்தியதால்தான் விஜய் வெளியேறினார்: உச்ச நீதிமன்றத்தில் தவெக தரப்பு