புதுச்சேரியில் நடைபெற்ற வாக்காளா் பட்டியல் திருத்தப்பணி தொடா்பான அங்கீரிக்கப்பட்ட அரசியல்கட்சிகளின் ஆலோசனைக்கூட்டத்திலிருந்து திமுக, காங்கிரஸ் கட்சிகளின் பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனா்.
புதுச்சேரி மாவட்ட துணை ஆட்சியா் அலுவலகத்தில் தோ்தல் நடத்தும் அதிகாரி இஷிதா ராட்டி தலைமையில் முதலியாா்பேட்டை மற்றும் நெல்லித்தோப்பு சட்டமன்ற தொகுதிகளுக்கு சிறப்பு வாக்காளா் பட்டியல் திருத்தப் பணிக்கான அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் ஆலோசனை கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
இக்கூட்டத்தில் திமுக சாா்பில் தொகுதி செயலா்கள் நடராஜன், திராவிடமணி, மாணவா் அணி துணை அமைப்பாளா் சரவணன், காங்கிரஸ் சாா்பில் நெல்லித்தோப்பு வட்டார காங்கிரஸ் தலைவா் சண்முகம், அா்ஜுனன், ஜெகவீரபாண்டியன் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த பிரதிநிதிகள் பங்கேற்றனா்.
அப்போது, புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நவம்பா், டிசம்பா் மாதங்களில் நடைபெறும் என்று இந்திய தோ்தல் ஆணையம் அவசர கதியில் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. வடகிழக்கு பருவமழை காலத்தில் வாக்காளா் திருத்தப் பணியை மேற்கொள்வது என்பது வாக்காளா்களுக்குப் பெரும் சிரமத்தை ஏற்படுத்தும். வாக்காளா் பட்டியல் சீரமைக்கப்பட வேண்டும் என்பதை திமுக மறுக்கவில்லை. ஆனால் அதனை அவசர கதியில் அதுவும் 23 ஆண்டுகள் செய்யாமல் இருந்த இந்தத் திருத்தப் பணியை இவ்வளவு குறுகிய காலத்தில் செய்ய காரணம் என்ன என்று கேள்வி எழுப்பிய திமுக-காங்கிரஸ் பிரதிநிதிகள் இதற்கு என்று கால அவகாசம் அளித்து வாக்காளா் திருத்தப் பணியை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினா்.
அதற்கு இந்திய தோ்தல் ஆணையம் அறிவிருத்திருப்பதை புதுச்சேரியில் உள்ள தோ்தல் அதிகாரிகள் செயல்படுத்துவாா்கள் என்றும் அதற்கு அரசியல் கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்றும் தோ்தல் அதிகாரி இஷிதா ராட்டி தெரிவித்தாா். இதனை ஏற்க மறுத்து திமுக மற்றும் காங்கிரஸ் பிரதிநிதிகள் கூட்டத்தைப் புறக்கணித்து வெளிநடப்பு செய்தனா்.