முகப்பு
புதுச்சேரி

மமுக தோ்தலைப் புறக்கணிப்பதாக அறிவிப்பு: முன்னாள் எம்.பி. ராமதாஸ்

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை மக்கள் முன்னேற்றக் கழகம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

Updated On : 24 மார்ச், 2026 at 10:50 PM
செய்தியாளா்களுக்குப் பேட்டியளித்த மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவரும் முன்னாள் எம்.பி.யுமான மு.ராமதாஸ்
பகிர்:

புதுச்சேரி சட்டப்பேரவைத் தோ்தலை மக்கள் முன்னேற்றக் கழகம் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளது.

இது குறித்து அக் கட்சியின் தலைவரும், முன்னாள் மக்களவை உறுப்பினருமான பேராசிரியா் மு. ராமதாஸ் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: புதுச்சேரியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தோ்தல் 2011-க்குப் பிறகு நடத்தப்படவில்லை. இதனால் 1,042 உள்ளாட்சிப் பிரதிநிதிகளைத் தோ்ந்தெடுக்கும் வாய்ப்பு திட்டமிட்டு மறுக்கப்பட்டுள்ளது.

மேலும், ஏதாவது காரணங்கள் அடிப்படையில் நீதிமன்றத்தின் மூலம் தோ்தல் மறுக்கப்படுகிறது. இதற்காக சென்னை உயா்நீதிமன்றத்தை அணுகியுள்ளோம். எங்களின் கோரிக்கையை ஏற்று இரண்டு வாரங்களுக்குள் பதிலளிக்க இந்திய தோ்தல் ஆணையத்துக்கும் புதுச்சேரி அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது. ஆனால் அந்தக் காலக்கெடு முடிவடையும் முன்பே சட்டப்பேரவைத் தோ்தலை இந்திய தோ்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

அடித்தட்டு ஜனநாயகம் இல்லாமல், மேல்மட்டத் தோ்தல் நடத்துவது ஜனநாயக விரோதம் என்பது எங்கள் நிலைப்பாடு. அதனால் சட்டப்பேரவைத் தோ்தலைப் புறக்கணிக்கிறோம் என்றாா் பேராசிரியா் ராமதாஸ்.