முகப்பு
விழுப்புரம்

காலாவதியான குளிர்பானத்தை குடித்த 31 மாணவர்களுக்கு வாந்தி, மயக்கம்: கள்ளக்குறிச்சி அருகே பரபரப்பு

கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானத்தை குடித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

Updated On : 29 ஜனவரி, 2024 at 4:27 PM
பகிர்:

கள்ளக்குறிச்சி அருகே காலாவதியான குளிர்பானத்தை குடித்த ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாணவர்கள் 31 பேருக்கு வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. உடனடியாக அவர்களுக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

விழுப்புரம் மாவட்டம், கள்ளக்குறிச்சியை அடுத்த புதுஉச்சிமேடு கிராமத்தில், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி உள்ளது. இப் பள்ளியின் முன் அதே கிராமத்தைச் சேர்ந்த பொன்னுசாமி மனைவி அலமேலு என்பவர் பெட்டிக்கடை நடத்தி வருகிறார்.

திங்கள்கிழமை காலை பள்ளிக்கு புறப்பட்டு வந்த மாணவர்கள், அந்தப் பெட்டிக் கடையில் குளிர்பானம் வாங்கிக் குடித்ததாகத் தெரிகிறது.

பின்னர், பள்ளிக்குள் சென்ற அந்த மாணவர்கள் இறைவணக்கக் கூட்டம் முடிந்ததும் வாந்தி எடுத்து, மயக்கமடைந்தனர். உடனே, அவர்களுக்கு கூத்தக்குடி ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டது.

அவர்களில் 2ஆம் வகுப்பு மாணவர் லோகேஷ் (7), 7ஆம் வகுப்பு மாணவர்கள் சின்னதுரை (12), தேவேந்திரன் (12), கருப்பையன் (12), பரமானந்தன் (12), 8ஆம் வகுப்பு மாணவர் காசிராஜன் (13), 5ஆம் வகுப்பு மாணவர் ராம் உள்ளிட்ட 8 மாணவர்கள் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். மற்ற மாணவர்களுக்கு ஊசி, மாத்திரைகள் வழங்கப்பட்டு, வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

இச்சம்பவம் குறித்து தகவலறிந்த மாணவர்களின் பெற்றோர்கள் ஏராளமானோர் மருத்துவமனை முன் குவிந்ததால் அப் பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

காலாவதியான குளிர்பானத்தை விற்பனை செய்தது தொடர்பாக அலமேலுவிடம் வரஞ்சரம் போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.