முகப்பு
விழுப்புரம்

2,500 பயனாளிகளுக்கு தாலிக்குத் தங்கம்: அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ்,  2,500 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் 

Updated On : 9 ஏப்ரல், 2018 at 9:20 AM
பகிர்:

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தின் கீழ்,  2,500 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் மற்றும் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் 370 மாணவர்களுக்கு மடிக்கணினிகளை சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
விழுப்புரத்தில் சமூக நலத்துறை சார்பில், திருமண நிதியுதவித் திட்டத்தின் கீழ் தாலிக்கு தங்கம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் இல.சுப்பிரமணியன் தலைமை வகித்தார்.  சட்டம், நீதிமன்றங்கள் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கலந்து கொண்டு 2,500 பயனாளிகளுக்கு தலா 8 கிராம் தங்கம் வீதம் ரூ.5 கோடி மதிப்பிலான 20 கிலோ தங்கத்தையும், ரூ.14,62,50,000 
மதிப்பீட்டில் அரசின் நலத் திட்ட உதவிகளையும், பள்ளிக் கல்வித் துறை சார்பில் நீட் தேர்வுக்கு பயிற்சி பெறும் 370 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா மடிக்கணினிகளையும் வழங்கினார்.
பின்னர் அவர் பேசியதாவது:
தமிழகத்தில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்த அனைத்துத் திட்டங்களையும் செயல்படுத்திக் காட்டினார். அவர் அறிமுகப்படுத்திய அனைத்துத் திட்டங்களும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசால் தற்போது வரை செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் பெண் கல்வி முன்னேற்றம் கண்டுள்ளது. தேசிய அளவில் பெண் கல்வியில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இதற்குக் காரணம்,  மறைந்த முதல்வர் ஜெயலலிதா கொண்டுவந்த விலையில்லா சைக்கிள், மடிக்கணினி வழங்கும் திட்டங்கள்தான்.
சமச்சீர் கல்வியே பாதிப்புக்கு காரணம்:  தமிழகத்தில் சமச்சீர் கல்வி வந்தால் மாணவர்களிடம் கல்வியில் போட்டி மனப்பான்மை இல்லாமல் போய்விடும். 
ஆகவே, சமச்சீர் கல்வி வேண்டாம் என்று அப்போது,  முதல்வர் ஜெயலலிதா ஆட்சிக்கு வந்த உடன் அதனை நீக்கினார். சமச்சீர் கல்விதான் வேண்டும் என்று திமுகவும், அதன் தோழமைக் கட்சியினரும் வலியுறுத்தினர். தற்போது, திமுக உடன் இருந்த கட்சிகளே சமச்சீர் கல்வி பாதிப்பை ஏற்படுத்தி விட்டதாகக் கூறுகின்றன.
உச்ச நீதிமன்ற தீர்ப்பால் தமிழகத்துக்கு நீட் தேர்வு வந்துவிட்டது. அதனை எப்படி எதிர் கொள்வது என்பதைத்தான் பார்க்க வேண்டும். மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு சார்பில் பயிற்சி அளிக்கப்படுகிறது என்றார். 
விழாவில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் ராஜேந்திரன், ஏழுமலை, காமராஜ், சட்டப்பேரவை உறுப்பினர்கள் குமரகுரு, சக்கரபாணி, மாவட்ட சமூகநல அலுவலர் லலிதா, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் முனுசாமி, விழுப்புரம் வருவாய் கோட்டாட்சியர் சரஸ்வதி, வட்டாட்சியர் சுந்தரராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.