காலமானார் முன்னாள் எம்எல்ஏ சேவல் கோ.கோதண்டராமன்
முன்னாள் எம்எல்ஏ சேவல் கோ.கோதண்டராமன் (67) உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
முன்னாள் எம்எல்ஏ சேவல் கோ.கோதண்டராமன் (67) உடல்நலக் குறைவால் சென்னையில் ஞாயிற்றுக்கிழமை காலமானார்.
விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூரை அடுத்த கொடுங்கால் கிராமத்தைச் சேர்ந்த இவர், உடல்நலக் குறைவால் சென்னையில் தனியார் மருத்துவமனை ஒன்றில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சைப் பெற்று வந்தார். அங்கு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை உயிரிழந்தார். கொடுங்கால் கிராமத்தில் உள்ள வீட்டுக்கு ஞாயிற்றுக்கிழமை மாலை அவரது உடல் கொண்டுவரப்பட்டு, அரசியல் கட்சிப் பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
சேவல் கோ.கோதண்டராமன் கடந்த 2001-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தலில், முகையூர் தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2016-ஆம் ஆண்டு நடைபெற்ற பேரவைத் தேர்தலில் திருக்கோவிலூர் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். அண்மையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தில் இணைந்து, முகையூர் ஒன்றியச் செயலராக பணியாற்றி வந்தார். இவருக்கு சுசீலா என்ற மனைவி உள்ளார்.