விழுப்புரம் அருகே தீ விபத்தில் 3 வீடுகள் சேதம்
விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
விழுப்புரம் அருகே ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு ஏற்பட்ட தீ விபத்தில் 3 கூரை வீடுகள் எரிந்து சேதமடைந்தன.
விழுப்புரம் அருகே கட்டம்பாக்கத்தை அடுத்து உள்ளது கட்டியமடை. இந்த கிராமத்தில் உள்ள பிரசாத சாலைப் பகுதியில் வசிப்பவர் சுப்பிரமணி(50), விவசாயக் கூலி. இவர், தனது கூரை வீட்டில் ஞாயிற்றுக்கிழமை இரவு குடும்பத்தினருடன் தூங்கினார்.
நள்ளிரவு 11 மணி அளவில் திடீரென வீட்டில் தீப்பற்றியது. உடனே, வீட்டில் இருந்த அனைவரும் அலறியடிந்து வெளியே வந்து, தீயை அணைக்க முயன்றனர். ஆனால், முடியவில்லை. தீ மளமளவென பற்றி எரிந்து, அருகில் இருந்த தட்சணாமூர்த்தி, ஜகன்நாதன் ஆகியோரது கூரை வீடுகளுக்குக்கும் பரவியது. இதனால், மூன்று வீடுகளும் கொளுந்துவிட்டு எரிந்தன.
தகவல் அறிந்து, விழுப்புரம் தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தண்ணீரைப் பீய்ச்சி அடித்து தீயை கட்டுப்படுத்தினர். இருப்பினும், 3 வீடுகளில் இருந்த ஆவணங்கள், வீடு உபயோகப்பொருள்கள் உள்ளிட்டவை எரிந்து சேதமடைந்தன. மின் கசிவு காரணமாக தீப்பற்றியதா அல்லது வேறு ஏதேனும் காரணமா என்று விழுப்புரம் தாலுகா போலீஸார் விசாரிக்கின்றனர்.