காவல் நிலையம் அருகே 620 லிட்டர் சாராயம் பறிமுதல்
விழுப்புரத்தில் காவல் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 620 லிட்டர் சாராயத்தை மது விலக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரத்தில் காவல் நிலையம் அருகே குடியிருப்புப் பகுதியில் பதுக்கி வைத்திருந்த 620 லிட்டர் சாராயத்தை மது விலக்கு போலீஸார் ஞாயிற்றுக்கிழமை பறிமுதல் செய்தனர்.
விழுப்புரம் மேற்கு காவல் நிலையம் அருகேயுள்ள ஜி.ஆர்.பி. தெரு, பெரிய காலனி பகுதியில் சிலர் சட்டவிரோதமாக, புதுச்சேரியில் இருந்து சாராயம் கடத்தி வந்து விற்பனை செய்து வருவதாக எழுந்த புகார்களின் பேரில் போலீஸார் அவ்வப்போது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு அப்பகுதியில் இருந்து 1,050 லிட்டர் சாராயத்தை கைப்பற்றிய போலீஸார், மணிமாறன் என்பவரை கைது செய்தனர்.
இந்த நிலையில், மீண்டும் அதே பெரிய காலனி பகுதியில் சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, மத்திய புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளர் கோவிந்தன், விழுப்புரம் மதுவிலக்கு காவல் ஆய்வாளர் ரேணுகாதேவி, காவல் உதவி ஆய்வாளர் பாஸ்கர் தலைமையிலான போலீஸார் ஞாயிற்றுக்கிழமை காலை அங்கு திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.
அப்போது, மூட்டை தூக்கும் தொழிலாளி ஹரி என்பவரின் வீட்டின் பின்புறம் 86 நெகிழிப் பைகளில் 516 லிட்டர் சாராயம் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவற்றை கைப்பற்றிய போலீஸார், அங்கிருந்த இரு சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்தனர்.
இதேபோன்று, மஞ்சுளா என்பவரின் வீட்டின் பின்புறம் 3 கேன்களில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 105 லிட்டர் சாராயத்தையும் கைப்பற்றினர்.
பறிமுதல் செய்யப்பட்ட சாராயத்தின் மொத்த மதிப்பு ரூ.1 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது.
ஹரி வீட்டின் பின்புறம் இருந்து கைப்பற்றப்பட்ட சாராயம் தொடர்பாக அதே பகுதியைச் சேர்ந்த ரஜினி, ஹரி ஆகியோர் மீதும், மஞ்சுளா வீட்டின் பின்புறம் இருந்த சாராயம் தொடர்பாக, அசோக், மஞ்சுளா ஆகியோர் மீது மதுவிலக்குப் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.