அரசு மரியாதையுடன் ராஜேந்திரன் எம்.பி. உடல் அடக்கம்
கார் விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரனின் உடல் அவரது கிராமத்தில் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
கார் விபத்தில் உயிரிழந்த விழுப்புரம் எம்.பி. ராஜேந்திரனின் உடல் அவரது கிராமத்தில் அரசு மரியாதையுடன் ஞாயிற்றுக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டது.
திண்டிவனத்தில் சனிக்கிழமை அதிகாலை நிகழ்ந்த சாலை விபத்தில், விழுப்புரம் மக்களவைத் தொகுதி உறுப்பினர் எஸ்.ராஜேந்திரன் உயிரிழந்தார். அவரது உடலுக்கு தமிழக முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி, துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்டோர் திண்டிவனம் அரசு மருத்துவமனை வளாகத்தில் அஞ்சலி செலுத்தினர்.
இதைத் தொடர்ந்து, ராஜேந்திரன் எம்.பி.யின் சொந்த ஊரான வானூரை அடுத்துள்ள ஆதனப்பட்டு கிராமத்துக்கு உடல் கொண்டு செல்லப்பட்டது. அங்கு உறவினர்கள், அரசியல் கட்சியினர், பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
ஆதனப்பட்டு கிராமத்தில் ராஜேந்திரன் எம்.பி.க்கு சொந்தமான நிலத்தில், அவரது இறுதிச் சடங்கு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இறுதி ஊர்வலத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.
ராஜேந்திரன் எம்.பி.யின் உடலுக்கு விழுப்புரம் மாவட்ட எஸ்.பி. ஜெயக்குமார் மரியாதை செலுத்தினார். தொடர்ந்து, போலீஸார் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தினர். பின்னர், ராஜேந்திரன் எம்.பி.யின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
ஓட்டுநர் மீது வழக்குப் பதிவு: ராஜேந்திரன் எம்.பி. சாலை விபத்தில் உயிரிழந்தது தொடர்பாக, அவரது கார் ஓட்டுநரான விழுப்புரம் அருகேயுள்ள அய்யூர் அகரத்தைச் சேர்ந்த அருமைச்செல்வம் (24) மீது திண்டிவனம் போலீஸார் வழக்குப் பதிந்தனர்.
திண்டிவனத்தில் விபத்து நிகழ்ந்த பகுதியில், சாலைப் பணி நடைபெறுவதை குறிக்கும் வகையில் எச்சரிக்கைப் பலகைகள் நெடுஞ்சாலைத் துறை சார்பில் அமைக்கப்பட்டுள்ளன. பாலம் வேலை நடைபெறும் இடத்தில் பேரிகார்டுகள், தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டுள்ளன.