விழுப்புரத்தில் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் பொது மக்கள் மனு அளித்தனர்.
விழுப்புரம் சாலாமேடு, மீனாட்சி நகர் பகுதி மக்கள் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பினர் வியாழக்கிழமை திரண்டு வந்து மாசுகட்டுப்பாடு வாரிய அலுவலகத்தில் மனு ஒன்றை அளித்தனர்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:
மக்கள் அதிகம் வசிக்கும் சாலாமேடு, மீனாட்சி நகர் பகுதியில் தனியார் செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. செல்லிடப்பேசி கோபுரம் அமைக்கப்பட்டால் அப்பகுதியில் வசிக்கும் மக்களுக்கும், கால்நடைகளுக்கும் கதிர்வீச்சினால் பாதிப்பு ஏற்படும். அதனால், செல்லிடப்பேசி கோபுரம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, மாவட்ட ஆட்சியரகத்திலும், மாசுக்கட்டுப்பாடு வாரிய அலுவலகத்திலும் மனு அளித்தோம்.
அந்த மனு குறித்து விசாரித்து நடவடிக்கை எடுத்து, செல்லிடப்பேசி கோபுரம் அமைப்பதை கைவிடுவார்கள் என்று எண்ணியிருந்தோம். ஆனால், தற்போது அந்த தனியார் செல்லிடப்பேசி நிறுவனத்தின் கோபுரம் அமைப்பதற்கான முதல்கட்ட பணிகள் தொடங்கி நடைபெற்று வருகின்றன. அந்தப் பணிகளை உடனே நிறுத்த வேண்டும். இல்லாவிட்டால் போராட்டம் நடத்தப்படும் என்று தெரிவித்திருந்தனர்.