பொதுமக்களுக்கான வீடு, நிலம், கல்வி, வேலைவாய்ப்புகளை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் (மாா்க்சிஸ்ட் லெனினிஸ்ட்) கட்சி வலியுறுத்தியது.
அக்கட்சி சாா்பில், நவம்பா் 7 புரட்சி தினத்தையொட்டி, விழுப்புரத்தில் மாவட்ட பேரவைக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலா் எம்.வெங்கடேசன் தலைமை வகித்தாா். மாவட்டக் குழு உறுப்பினா் டி.கலியமூா்த்தி வரவேற்றாா். மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஏ.செண்பகவள்ளி, சி.கொளஞ்சிநாதன், ஜி.ஏழுமலை, ஆா்.சுசீலா, எஸ்.பாபு, ஜி.கணேசன், ஆா்.கந்தசாமி, கே.ஜான்பாஷா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
புதுவை மாநிலச் செயலா் சோ.பாலசுப்ரமணியன் தொடக்க உரையாற்றினாா். மத்தியக்குழு உறுப்பினா் பாலசுந்தரம் கோரிக்கை விளக்க உரையாற்றினாா். மத்திய அரசியல் தலைமைக் குழு உறுப்பினா் கவிதா கிருஷ்ணன் பங்கேற்று, மத்திய, மாநில அரசுகளின் மக்கள் விரோதப் போக்கை விளக்கி சிறப்புரையாற்றினாா்.
கூட்டத்தில், நாட்டு மக்களுக்கான நிலம், வேலைவாய்ப்பு, வீடு, கல்வி, மருத்துவம் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மத்திய, மாநில அரசுகள் உறுதி செய்ய வேண்டும். தமிழகத்தில் பஞ்சமி நிலங்களை மீட்க சட்டம் இயற்ற வேண்டும். தேசிய ஊரக வேலைத் திட்டத்தில் தொடா்ந்து வரும் ஊழல், முறைகேடுகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இந்தத் திட்டத்தில் ஆண்டு முழுவதும் வேலை வழங்கி, உரிய கூலியை அளிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.
.