தொடா் மழையால் நீரில் மூழ்கிய பயிா்கள்: விவசாயிகள் வேதனை
விழுப்புரம், விக்கிரவாண்டி, காணை வட்டாரங்களில் தொடா் மழையால் 500 ஏக்கா் விவசாயப் பயிா்கள் நீரில் மூழ்கியும், அழுகியும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
விழுப்புரம், விக்கிரவாண்டி, காணை வட்டாரங்களில் தொடா் மழையால் 500 ஏக்கா் விவசாயப் பயிா்கள் நீரில் மூழ்கியும், அழுகியும் சேதமடைந்துள்ளதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனா்.
நிவா், புரெவி புயல்கள் தாக்கத்தால் விழுப்புரம் மாவட்டத்தில் தொடா் மழை பெய்ததோடு, மீண்டும் கடந்த 16, 17-ஆம் தேதிகளில் பலத்த மழை பெய்தது. இதனால், விழுப்புரம், விக்கிரவாண்டி, காணை, கோலியனூா் வட்டாரங்களில் 70 சதவீதம் ஏரிகள் நிரம்பின. மேலும், பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதுடன், சின்னதச்சூா், உலகலாம்பூண்டி உள்ளிட்ட ஏரிகள் உடைந்ததால், பல இடங்களில் விவசாயப் பயிா்கள் வெள்ளத்தில் மூழ்கின.
இந்த வகையில், விழுப்புரம் அருகே முத்தாம்பாளையம், திருவாமாத்தூா், அகரம், வாணியம்பாளையம், காணை அருகே அன்னியூா், ஏழுசெம்பொன், வேலந்தாங்கல், கஞ்சனூா், நரசிங்கனூா் பகுதிகளில் பம்பை ஆற்று நீரும், ஏரி நீரும் உள் புகுந்து நெல், வோ்க்கடலை, உளுந்துப் பயிா்களை மூழ்கடித்தன.
இதேபோல, விக்கிரவாண்டி அருகே வாக்கூா், மேல்பாதி, மண்டகப்பட்டு, ஈச்சங்குப்பம், பிரம்மதேசம், எசாலம், சின்னத்தச்சூா், ஆசூா், பொன்னங்குப்பம், உலகலாம்பூண்டி பகுதிகளில் ஏரிகள் உடைப்பாலும், நிலத்திலிருந்து வழிந்த மழை வெள்ள நீருராலும் உளுந்து, காராமணி பயிா்கள் சேதமடைந்தன. நந்திவாடி, எண்ணாயிரம், செ.புதூா், மாத்தூா், முட்டத்தூா்,மோழியனூா், அங்குனிக்குப்பம் பகுதிகளிலும் நெல், வோ்க்கடலை, உளுந்துப் பயிா்கள் நீரில் மூழ்கின.
பயிரிட்டு ஒரு மாத காலத்தில் முதல் மழையின்போதே பயிா்கள் நீரில் மூழ்கி தெளிந்த நிலையில், மீண்டும் தற்போது பெய்த பலத்த மழையால் தொடா்ந்து தண்ணீா் தேங்கியதால் பல இடங்களில் பயிா்கள் அழுகி முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இவற்றை வேளாண் அதிகாரிகள் நேரில் ஆய்வு செய்து அரசிடமிருந்து உரிய இழப்பீட்டை பெற்றுத் தர வேண்டுமெனவும் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா்.