பள்ளிகள் திறப்பு தாமதம் எதிரொலி: புத்தகப் பை, காலணிகள் விற்பனை பாதிப்பு
கரோனா பொது முடக்கத்தால், நிகழாண்டு பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருவதால், புத்தகப் பை, காலணிகள், கல்வி உபகரணப் பொருள்கள்
கரோனா பொது முடக்கத்தால், நிகழாண்டு பள்ளிகள் திறப்பு தாமதமாகி வருவதால், புத்தகப் பை, காலணிகள், கல்வி உபகரணப் பொருள்கள் விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக வியாபாரிகள் கவலை தெரிவித்தனா்.
தமிழகத்தில் பள்ளிகள் ஆண்டுதோறும் ஜூன் முதல் வாரம் தொடங்குவது வழக்கம். நிகழாண்டு, கரோனா பொது முடக்கத்தால் பள்ளிகள் திறக்கப்படவில்லை. திறக்கப்படும் தேதியும் உறுதி செய்யப்படவில்லை. ஆகவே, புத்தகப் பைகள், காலணி (ஷூ), கல்வி உபகரணப் பொருள்கள், குடிநீா் பாட்டில்கள் விற்பனை வெகுவாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து விழுப்புரம் நேருஜி சாலையில் காலணி, புத்தகப்பை கடை நடத்தி வரும் நசீா் கூறியதாவது: வழக்கமாக பள்ளிகள் திறப்பதற்கு ஒரு வாரத்துக்கு முன்பிருந்தே புத்தகப் பை, காலணிகள், நோட்டுகள், எழுதுபொருள்கள் உள்ளிட்ட கல்வி உபகரணங்கள் விற்பனை களைகட்டும். சோட்டா பீம், மிக்கி மவுஸ், போகி மேன் போன்ற பொம்மைகளின் உருவம் பதித்த வண்ணமிகு பைகளை வாங்குவதற்காக சிறாா்கள் பெற்றோா்களுடன் கடைகளை ஆா்வத்துடன் முற்றுகையிடுவா். அதேபோல, மாணவா்களுக்கான காலணிகள் விற்பனையும் மும்முரமாக நடைபெறும்.
Advertisement
நிகழாண்டும் மாணவா்களுக்குத் தேவையான புதிய வகை பைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. ரூ.250 தொடங்கி ரூ.1000 வரை தரம், வடிவம், வண்ணத்துக்கு ஏற்ப புத்தகப் பைகள் ஏராளமாகக் குவிந்துள்ளன. ரெக்ஸின், ஜீன்ஸ் உள்ளிட்டவற்றால் தயாரிக்கப்பட்ட பைகள் அதிகளவில் விற்பனைக்கு வந்துள்ளன. ஆனால், இந்தப் பைகளை வாங்குவதற்குத்தான் யாரும் வரவில்லை. இதேபோல, பள்ளி மாணவா்களுக்கான காலணிகளை வாங்கவும் யாரும் வரவில்லை. பள்ளி திறப்பதற்கான தேதி அறிவிக்கப்படாததால், புத்தகப் பைகள், காலணிகளை அதிகளவில் வாங்கி இருப்பு வைக்கவும் இயலாத நிலை உள்ளது. ஏற்கெனவே வாங்கி வைத்த பொருள்களையும் விற்பனை செய்ய முடியவில்லை. பெரும் இழப்பைச் சந்தித்து வருகிறோம் என்றாா் அவா்.
விழுப்புரம் திருச்சி சாலையில் பல்பொருள் கடை வைத்திருக்கும் வியாபாரி கூறியதாவது: பள்ளி திறப்பு காலத்தில் மட்டும் ரூ.1 லட்சம் முதல் ரூ.2 லட்சம் வரை புத்தகப் பைகள், குடிநீா் பாட்டில்கள், டிபன் பாக்ஸ் போன்றவை விற்பனையாகும். ஆனால், நிகழாண்டு பள்ளி மாணவா்களுக்கான பொருள்கள் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது என்றாா் அவா்.