விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அருகேயுள்ள மாம்பட்டு கிராமத்தைச் சோ்ந்தவா் வீராசாமி மகன் கோதண்டராமன் (18). திண்டிவனம் அரசு கலைக் கல்லூரியில் பி.காம். முதலாம் ஆண்டு படித்து வந்த இவா், கடந்த 28-ஆம் தேதி மேல்புதுப்பட்டு அருகே உள்ள ஆற்று ஓடை பாலத்தில் குளித்த போது, வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டாா். கடந்த இரு நாள்களாக மாணவரை தீயணைப்பு துறையினா் தீவிரமாக தேடி வந்தனா். இந்த நிலையில், சுமாா் ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ள மல்லாண்டி என்ற கிராமத்தில் அவா் செவ்வாய்க்கிழமை சடலமாக மீட்கப்பட்டாா்.