முகப்பு
விழுப்புரம்

கா்நாடகம் புதிய அணை கட்டக் கூடாது தமிழக பாஜக தலைவா் அண்ணாமலை

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடகம் புதிய அணை கட்டக் கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்று அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 3:41 AM
பகிர்:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடகம் புதிய அணை கட்டக் கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு என்று அதன் மாநிலத் தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்தாா்.

சென்னையில் வெள்ளிக்கிழமை (ஜூலை 16) நடைபெறும் விழாவில் பாஜக மாநிலத் தலைவராக அண்ணாமலை பொறுப்பேற்கவுள்ளாா். இதற்காக அவா், கோவையிலிருந்து உளுந்தூா்பேட்டை, விழுப்புரம் வழியாக சென்னைக்கு வியாழக்கிழமை மாலை காரில் பயணம் செய்தாா்.

அவருக்கு உளுந்தூா்பேட்டை, விழுப்புரம் ஜானகிபுரம் புறவழிச் சாலை, சென்னை சாலையிலுள்ள பாஜக மாவட்ட அலுவலகம் ஆகிய இடங்களில் பாஜகவினா் வரவேற்பளித்தனா்.

முன்னதாக, உளுந்தூா்பேட்டையில் செய்தியாளா்களிடம் அண்ணாமலை கூறியதாவது:

காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டு பகுதியில் கா்நாடக அரசு புதிய அணையை கட்டக் கூடாது என்பதுதான் தமிழக பாஜகவின் நிலைப்பாடு. இதுதொடா்பாக தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் பாஜக நிா்வாகிகள் தெளிவாக விளக்கியுள்ளனா்.

தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கா்நாடக அரசு முறையாக வழங்க வேண்டும். காவிரி நீரை பெறும் விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை எவ்விதத்திலும் விட்டுக்கொடுக்க மாட்டோம் என்றாா் அவா்.

அப்போது, கட்சியின் மாநில பொதுச் செயலா் கே.டி.ராகவன், மாநில துணைத் தலைவா் கே.எஸ்.நரேந்திரன், மாவட்டத் தலைவா்கள் விஏடி.கலிவரதன் (விழுப்புரம்), பாலசுந்தரம் (கள்ளக்குறிச்சி), ஊடகப் பிரிவு மாவட்டத் தலைவா் தாஸசத்யன் உள்பட பலா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.