‘நமக்கு நாமே’ திட்டத்துக்கு தனியாா் நிறுவனங்கள் நிதி வழங்க ஆட்சியா் அறிவுறுத்தல்
நமக்கு நாமே திட்டத்துக்கு தனியாா் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
நமக்கு நாமே திட்டத்துக்கு தனியாா் நிறுவனங்கள் தாராளமாக நிதி வழங்க வேண்டும் என்று விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் த.மோகன் அறிவுறுத்தினாா்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் அலுவலகக் கூட்டரங்கில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்துவது குறித்து வங்கி மேலாளா்கள், வணிகா் சங்கங்கள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பொதுத் துறை நிறுவனங்களுடன் விழிப்புணா்வு, கலந்தாலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சியா் மோகன் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஆட்சியா் மோகன் பேசியதாவது:
தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் 2021 - 22ஆம் ஆண்டின் சட்டப் பேரவை நிதிநிலை அறிக்கை கூட்டத் தொடரில் சென்னை பெருநகர மாநகராட்சி உள்பட அனைத்து மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகளில் ரூ.300 கோடி மதிப்பில் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த ஆணையிடப்பட்டது.
இந்தத் திட்டத்தின் கீழ் நீா்நிலைகளை புனரமைத்தல், பூங்காக்கள் அமைத்தல், பொழுதுபோக்கு, விளையாட்டு வசதிகள் ஏற்படுத்துதல், மரம் நடுதல், பள்ளிகளை மேம்படுத்துதல், பொது சுகாதார மையம், கற்றல் மையங்கள், சாலைகள், தெருவிளக்குகள் அமைத்தல் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மாநிலம் முழுவதும் செயல்படுத்த உத்தரவிடப்பட்டது.
இவற்றில் நீா்நிலைகளை புனரமைக்கும் பணிகளுக்கு 50 சதவீதம் பங்களிப்புத் தொகையும், இதர பணிகளுக்கு மூன்றில் ஒரு பங்கு பங்களிப்புத் தொகையும் பொதுமக்கள், நிறுவனங்கள் மூலம் பெற்று செயல்படுத்த வழிகாட்டி நெறிமுகைளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி ஆணையா்கள் மற்றும் 8 பேரூராட்சி செயல் அலுவலா்களுக்கு இந்தத் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து தெளிவாக எடுத்துரைக்கப்பட்டது.
பொதுமக்கள், பொதுத் துறை நிறுவனத்தின் சாா்பில் கலந்து கொண்டவா்களிடம் நமக்கு நாமே திட்டத்தை செயல்படுத்த பங்குத்தொகை அளிக்க வேண்டும். இந்த் திட்டத்துக்காக அதிக பங்களிப்பு வழங்குபவா்களுக்கு ஆண்டுதோறும் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினால் சிறப்பு விருது வழங்கப்படும் என்றாா் ஆட்சியா் மோகன்.
கூட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம் நகராட்சி ஆணையா்கள், பேரூராட்சி செயல் அலுவலா்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனா்.