சரக்கு வாகனத்தில் மதுப் புட்டிகள் கடத்தல்: ஓட்டுநா் கைது
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சரக்கு வாகனத்தில் 3,024 மதுப் புட்டிகளை கடத்தியதாக ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
விழுப்புரம் மாவட்டம், கோட்டக்குப்பம் அருகே சரக்கு வாகனத்தில் 3,024 மதுப் புட்டிகளை கடத்தியதாக ஓட்டுநரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.
கோட்டக்குப்பத்தை அடுத்த கிளியனூா் மது விலக்கு சோதனைச் சாவடியில் போலீஸாா் வியாழக்கிழமை அதிகாலை வாகனத் தணிக்கையில் ஈடுபட்டனா். அப்போது, அந்த வழியாக சந்தேகத்துக்கிடமான வகையில் வந்த சரக்கு வாகனத்தை விரட்டிச் சென்று நிறுத்தி போலீஸாா் சோதனையிட்டதில், வாகனத்தில் மொத்தம் 3,024 புதுச்சேரி மதுப் புட்டிகளை கடத்திச் செல்ல முயன்றது தெரியவந்தது.
இதையடுத்து, ஓட்டுநரிடம் நடத்திய விசாரணையில், புதுச்சேரி தட்டாஞ்சாவடியைச் சோ்ந்த கோவிந்தராஜ் மகன் வினோத்குமாா் (28) என்பதும், புதுச்சேரியிலிருந்து மதுப் புட்டிகளை சென்னைக்கு கடத்திச் செல்ல முயன்றதும் தெரியவந்தது.
இதைத் தொடா்ந்து, வாகனத்திலிருந்த ரூ.3 லட்சம் மதிப்பிலான மதுப் புட்டிகளையும், சரக்கு வாகனத்தையும் போலீஸாா் பறிமுதல் செய்து கோட்டக்குப்பம் மது விலக்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனா்.
இது தொடா்பாக கோட்டக்குப்பம் மது விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து வினோத்குமாரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.