முதல்வர் மு.க. ஸ்டாலின் குறித்தும், தமிழக அரசு குறித்தும் அவதூறாக பேசிய வழக்கில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் விழுப்புரம் நீதிமன்றத்தில் திங்கள்கிழமை ஆஜரானார்.
விழுப்புரம் மாவட்டம், ஆரோவில் பகுதியில் 2023, மார்ச் 10-ஆம் தேதி நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் பங்கேற்ற மாநிலங்களவை உறுப்பினரும், முன்னாள் அமைச்சரும், மாவட்டச் செயலருமான சி.வி.சண்முகம், முதல்வரையும், ஆட்சிக்கும் களங்கம் ஏற்படுத்தும் வகையில் பேசியதாகக் கூறப்படுகிறது. இதைத் தொடர்ந்து சி.வி. சண்முகம் மீது விழுப்புரம் முதன்மை மாவட்டநீதிமன்றத்தில் அரசுத் தரப்பு வழக்குரைஞர் சுப்பிரமணியன் அவதூறு வழக்கைத் தொடர்ந்தார்.
இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் அக்டோபர் 9-ஆம் தேதி விழுப்புரம் நீதிமன்றத்தில் சி.வி.சண்முகம் நேரில் ஆஜராக வேண்டும் என்று முதன்மை மாவட்ட நீதிமன்றம் செப்டம்பர் 12-ஆம் தேதி உத்தரவிட்டிருந்தது.
முன்னதாக செஞ்சி அருகிலுள்ள நாட்டார்மங்கலத்தில் மார்ச் 7-ஆம் தேதி நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய சி.வி.சண்முகம், தமிழக அரசையும், முதல்வர் மு.க.ஸ்டாலினின் மதிப்பையும், மாண்பையும் குறைக்கும் வகையில் அவதூறாக பேசியதாகக் கூறி, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் அரசுத் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டுள்ளது என்பதும், இந்த வழக்கிலும் அக்டோபர் 9-ஆம் தேதி அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் ஏற்கெனவே உத்தரவிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
ஆஜர்: இதைத் தொடர்ந்து விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் திங்கள்கிழமை (அக்.9) ஆஜரானார். உடன், அதிமுக வழக்குரைஞர்கள் உடன் சென்றனர். இதையடுத்து வழக்கின் அடுத்த கட்ட விசாரணை நவம்பர் 6-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி ஆர். பூர்ணிமா உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.